மல்லி 22

“வேந்தா! எத்தனைடா?” 

“எத்தனைடாவா!பாட்டில் பாட்டிலா குடிக்கும் போது மட்டும் எத்தனைனு கணக்குப் பாக்கல. இப்ப மில்லி மில்லியா மருந்து குடிக்க மட்டும் கசக்குதா?” 

“முடியலடா, தொண்டையெல்லாம் கசக்குது.” 

முகமும் குரலும் ஒருசேர சோர்ந்து ஒலிக்க, அலுத்துக் கொண்டவரைப் பார்க்க அவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது. 

“உடம்புல இருக்குற அத்தனை பார்ட்சும் டேமேஜ் ஆகியிருக்கு மாமா. வண்டிய எஃப்.சிக்கு அனுப்பற மாதிரி ஃபுல் சர்வீஸ் பண்ணனும். சின்னப்பிள்ளை மாதிரி அடம்பண்ணாதீங்க. வேணும்னா உங்க பிள்ளைய வரச்சொல்லவா?”

 பூச்சாண்டிய கூப்பிடவா என சிறு பிள்ளையை மிரட்டுவது போல் மருந்தை கையில் வைத்துக் கொண்டு மிரட்ட, 

“வேண்டாம்டா, நீயே குடு!”

“அவ சைசுக்கு பயப்படுறீங்க. என்னையெல்லாம் பாத்தா மனுஷனாக்கூட மதிக்கறதில்ல.” 

சடைத்தவாறே கையில் நாட்டு மருந்தைப் கொடுக்க, கண்ணை இருக்க மூடி வாயெடுக்காமல் குடித்துவிட்டு ஊஃப்ப் என ஊதினார். எட்டிக்கசப்பு அந்த நாட்டு மருந்து. அவர் குடித்ததைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவன்,

 “மருந்தக்கூட சரக்கடிக்கர மாதிரியே அடிக்க வேண்டியது.” நையாண்டி பேச, 

கஞ்சியோடு உள்ளே வந்தவள், “அவரா மறந்தாக்கூட நீங்க விடமாட்டீங்க போலயே? மில்லி, சரக்கு, பாட்டில்னு பேச்சுக்கு பேச்சு அதையே ஞாபகப் படுத்துறீங்க.” வெடுவெடுவென விழ, கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான்.‌ கணபதி, என்னமோ என்ன மட்டும் சொன்ன. இப்ப நீயென்னடா பண்ற என நக்கலாக கண்களாலேயே பார்க்க,

“நல்லா பண்றீங்க ரெண்டு பேரும்” என எழுந்து கொண்டான். 

“எங்கடா போற?”

“சமையல்ங்கற பேர்ல உங்க மக எதையாவது செஞ்சு வச்சுருப்பா. நீங்க கண்ணமூடிட்டு மருந்து குடிச்சமாதிரி நானும் சாமி மேல பார்த்தப் போட்டு சாப்பிட போறேன்.” 

  வேந்தன் எழுந்து செல்ல, ‘ரொம்பத்தான்’ மனதிற்குள் நொடித்துக் கொண்டவள், கஞ்சியை அப்பாவிடம் கொடுத்தாள். 

மருத்துவமனை வாசம் முடிந்து வீடுவந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகப்போகிறது. 

அன்று செழியன் அழைத்ததும் உள்ளே செல்ல, அப்பொழுதுதான் கணபதி கண் திறந்திருந்தார். இரண்டிரண்டு பெயராக சென்று பார்த்து வந்தனர். 

மகளின் ஓய்ந்த தோற்றம் பார்த்ததும் கடைகண்ணில் கண்ணீர் வடிய, வேகமாக கண்களை துடைத்துவிட்டாள். மரணத்தை தொட்டுவந்த பயத்தைவிட மகளை தனியே விட்டுச்செல்ல இருந்தோமே என்கிற பயம்தான் அதிகம் தெரிந்தது. 

கலங்கிய கண்களோடு, “நீங்களும் என்னைவிட்டுப்போக நெனச்சீங்கள்லப்பா.” தொண்டையடைத்து குரல் தழுதழுக்க, அவளது அழைப்பே அவருக்கு நெஞ்சில் பால் வார்க்க, அப்படி ஒரு ஒளிர்வு அவரது கண்களில். முகம் கொள்ளா சந்தோஷம். மழலையில் அழைத்தபொழுது கூட இந்தளவிற்கு மகிழ்ந்திருப்பாரா தெரியாது. அவளது அப்பா எனும் அழைப்பில் ஜென்மசாபல்யம் அடைந்தவர் போல பூரித்துப் போக, 

மாமன் உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்தவன்,

“அதான் முழிச்சுட்டார்ல. அவர எமோஷனல் ஆக்காதே!” என கடிந்துகொண்டான். 

“சீக்கிரம் எந்திருச்சு வாரும்! உம்ம, இப்படி பாக்க சகிக்கல.” வழக்கம்போல் நக்கலாக பேசினாலும் மருமகன் குரலில் இருந்த சுதிபேதம் மாமனுக்குத் தெரியாமலில்லை.

பேசமுடியவில்லை என்றாலும் மகளை கவலையாகப் பார்க்க, அதைப் புரிந்தவன், கைகளை அழுத்திக் கொடுக்க, அந்த அழுத்தமே நானிருக்கிறேன் என அவருக்கு உணர்த்திவிட்டு அவளை வெளியே அழைத்து வந்தான்.

மருத்துவர் முன் இருவரும் அமர்ந்திருக்க, அவர் உடல்நிலை பற்றி அவர்களுக்கு மருத்துவர் சொல்லிக் கொண்டிருந்தார். உணவுக்கட்டுப்பாடு, அமைதியான மனநிலை, நடைப்பயிற்சி பற்றி விளக்கிச் சொல்லிவிட்டு, இவ்வளவு நாட்களின் குடியின் உபயமாக  மஞ்சள்காமாலையும் இருப்பதாகவும், முதலில் அதை குணப்படுத்த வேண்டும் என கூறினார். 

அதன் பிறகு ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யவேண்டும் என கூற, மூன்று நாட்களில் வீடு திரும்பினர். நாட்டு மருந்தும், பத்தியச்சாப்பாடும் கொடுக்கவேண்டுமென மல்லுக்கட்டி தாமரை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். 

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து எடுத்துக் கொள்கிறார். அதை குடிக்கத்தான் சிறுபிள்ளையாட்டம் அத்தனை அக்கப்போர்.‌ 

மாரியம்மாளும், ரெங்கநாதனும்  மருத்துவமனையில் வைத்தே பார்த்துச் சென்றனர். மங்கைக்கு தாய்மாமனாக ரெங்கநாதன்தான் முன் நிற்க வேண்டும். உறவை ஒரேயடியாக ஒதுக்க முடியாது என மகனை அதட்டி அழைத்துவந்தார். 

திவ்யாவும் மாமனார், மாமியாரோடு வந்து மருத்துவமனையிலேயே மாமனை நலம் விசாரித்து சென்றிருந்தாள். 

வேந்தனும், கணபதிக்கு துணையாக அவரது அறையில் தங்கிக் கொள்ள, வழக்கம்போல் அவளுக்கு வேந்தன் அறைவாசமே. நித்தமும் அவன் புகைப்படத்திற்கு முந்தானை‌ மூடுவிழாவே. கண்டும் காணாதது போல் இருந்து கொண்டான். 

இப்பொழுது வீடும், வீட்டு ஆட்களும் சகஜமாகப் பழகிவிட, அம்மையப்பனிடம் கூட மரியாதையாக இயல்பாக பேச முடிந்தது. செழியன் இவள் பேசினாலும் பேசவில்லை என்றாலும் வலிய பேசும் ரகம். 

இன்னும் நீயாக என்னைத்தேடி வரவில்லை என்ற கோபம் மட்டும் கழுத்தளவு உள்ளது வேந்தன்‌ மீது. 

முன்தினம்,

 திவ்யாவிற்கு நாள் தள்ளிப் போயிருப்பதாக தகவல் வர, விடிந்தும் விடியாமலும் தாமரையும், அம்மையப்பனும் மகளைப் பார்க்க கூடை கூடையாகப் பழங்களோடு கிளம்பிவிட்டனர். 

கணபதி வீட்டில் இருப்பதால் அவர்கள் வந்தபிறகு அண்ணன்கள் செல்வதாக உத்தேசம். அதனால் இன்று சமையல் யூடியூப் உபயத்தில் மங்கையின் கைவண்ணம். 

சாப்பாட்டு மேஜையின் முன் சோகமே உருவாக அமர்ந்திருந்தான் செழியன். 

“எள்ளுதான் எண்ணெய்க்கு காயணும். நானும் சேந்து ஏன் காயணும்?” நொந்து கொள்ள,

“ஒரு நாள் அட்ஜஸ் பண்ண மாட்டியாடா?” 

“முடியலண்ணே! நைட்டு ஹோட்டல்ல வாங்கிக்கலாமா?” ரகசியம் போல் கேட்க, 

“மொதல்ல அதச்செய்டா! நான் சொன்னா மூஞ்சியத் தூக்கிக்குவா.” அவனும் பயம் போல் சொல்ல,

“அண்ணே ரொம்பப் பயப்படறீங்க.”

“நாளைக்கு உன்னையும் பாக்கலாம்டா. பதுங்குறியா… பாயறியான்னு?” தம்பியிடம் வாதாட, 

“நீதானே வாக்கப்பட்டு போகப்போற. நான் இங்கதானே இருப்பேன். என்னைய அம்மா பாத்துப்பாங்க.” அண்ணனை கேலி பேச, அந்த நேரம் பார்த்து, 

“முத்தே முத்தம்மா முத்தமொன்னு தரலாமா?” ரிங் டோன் அழைப்பில் அலைபேசி ஒலிக்க, அழைப்பை அவசரமாக கட் செய்தான். மீண்டும் அதே அழைப்பு இரண்டு நிமிட இடைவெளியில். 

“யார்றா? பேசுடா!”

“ஏதோ ஸ்பேம் கால்ண்ணே. லோன் வேணுமானு கேப்பாங்க. சாப்பிட்டு பாத்துக்கறேன்.” பேச்சில் நழுவிய தம்பியை சந்தேகமாகப் பார்த்தான். இதுவரை அவன் ரிங்டோன் செட் செய்து பார்த்ததில்லை. எல்லா அழைப்பிற்கும் பொதுவான ரிங்டோனே. 

இவ்வளவு நேரமாக வாயில் வைக்கமுடியவில்லை என்றவன், குருட்டுக் கோழி தவிட்ட முழுங்குறமாதிரி அவசரமாக அள்ளி சாப்பிட்டுவிட்டு வேகமாக எழுந்து கொண்டான்.‌ 

வேந்தனும் சாப்பிட்டு எழுந்து கொள்ள, கை கழுவிவிட்டு சோஃபாவில் அமர்ந்து கைபேசியில் கவனமாக, நைசாக வெளியே பார்க்கிங் ஏரியா பக்கம் நழுவியவன், அழைப்பு விடுத்தான்.

“முத்துக்கருப்பன் பிசியோ?” எடுத்தவுடன் எதிர்‌முனையில் கோபம் தெரித்தது.

“அதான் கட் பண்றேன்னு தெரியுதுல்ல. உடனே கூப்பிடனுமா?” குரலை அடக்கி வாசிக்க,

“எப்பவும் நானே வலிய கால் பண்றேன்ல. அந்த இளக்காரம். இன்னைக்கு அண்ணியப் பாக்குற சாக்குல நீங்களும் வருவீங்கனு எதிர்பாத்தேன்.” கோபத்தோடு ஏக்கமும் ஏகபோகமாகத் தெரிந்தது கன்னியின் குரலில்.

“நீயும் மாமாவப் பாக்க ஹாஸ்பிடல் வருவேன்னு நானும்தான் நெனச்சேன்.” தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்தது ஆடவன் குரல். 

“ஹலோ! அப்ப எல்லாம் நம்மலப்பத்தி எங்க வீட்ல பேசிக்கல. அதுவுமில்லாம எங்க வீட்ல வயசுப் பிள்ளைய அப்படியெல்லாம் எங்கேயும் கூட்டிப் போகமாட்டாங்க.”

“எங்க வீட்லயும் வயசுப்பையன எங்கேயும் கூட்டிப்போக மாட்டாங்க. எங்களுக்கு ஏக டிமான்ட்.”

“ஹோஓ! அப்ப நீங்க பத்திரமா வீட்டுக்குள்ளயே இருங்க. நான் கட் பண்றேன்!” எதிர் முனையில் சிலுத்துக் கொள்ள, இவனும் அமைதியாக இருக்க, அழைப்பு துண்டிக்கப்படவில்லை. இப்பக்கம் நமட்டுச் சிரிப்போடு அழைப்பு துண்டிக்கப்படுகிறதா என அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவளும் அமைதியாக காதில் வைத்திருந்தாள் இவன் துண்டிக்கிறானா‌ எனப் பார்க்க. இருபுறமும் நிசப்தமே. 

முதன் முதலாக அவள் அழைத்தபொழுது யாரெனத் தெரியாமல்தான் அழைப்பை ஏற்றான். முத்துப்பேச்சி எனத் தெரிய ஆச்சர்யமும், சந்தோஷமுமாக அழைப்பை ஏற்றவன்,

“என் நம்பர் எப்படித் தெரியும்! திவ்யாகிட்ட வாங்குனீங்களா?” ஆராய்ச்சியாய் கேட்க,

“அன்னைக்கு மண்டபத்துல சொன்னீங்களே?”

“அதுதான் நீங்க நோட்பண்ணவே இல்லையே?”

“அதெல்லாம் பண்ணோம்.” மக்கு மண்ணாந்தை. ஒருத்தி ஃபோன் பண்றாளே. ஏன், எதுக்குனு யோசிக்காம ஃபேன் நம்பர் எப்படி கெடச்சுதுன்னு ஆராய்ச்சி பண்ணுது. இதெல்லாம் என்னத்த? மனதிற்குள் அலுத்துக் கொண்டாள்.

“எதுக்குங்க கால் பண்ணீங்க?”

“எங்க ஊர்ல மழை பெய்யுது. உங்க ஊர்லயும் பெய்தான்னு கேக்கதாங்க.”

“இங்க மழை இல்லீங்க. வெயில் கொளுத்துது.” சலிப்பாய் பதில் சொல்ல, நேரில் இருந்தால் அவளும் சேர்ந்து கொளுத்திவிடுவாள் அவ்வளவு ஆத்திரம் மூண்டது உள்ளுக்குள். 

கணபதியை மருத்துவமனையில் பார்த்து சென்றபிறகு மதியழகன் தன் அப்பாவிடம், இவர்கள் தோட்டம் வாங்க பணம் கொடுப்பது பற்றி பேசினான். கூடவே தங்கையை செழியனுக்கு கொடுக்க அபிப்ராயப் படுவதையும்தான். 

நிச்சய வீட்டில் அண்ணன், தம்பி இருவரையும் பார்த்தபொழுதே மாணிக்கத்திற்கும் அந்த எண்ணம் இருந்தது. அவருக்கு மூத்தவனான வேந்தன்தான் நினைப்பில் இருந்தான். ஆனால், திருமணத்தில் வேந்தன், மங்கையை பெண் கேட்டுவிட, அங்கு பிரச்சினையும் வெடிக்க அப்போதைக்கு செழியனைப்பற்றி அவர் யோசிக்கவில்லை. இப்பொழுது மகன் கேட்க நல்ல சம்பந்தம்தான் எனத்தோன்ற,

“இன்னும் வேந்தனுக்கே முடிக்கலையே மதி. நம்ப எப்படி கேக்குறது?” என்றார்.

“மெதுவா முடிக்கட்டும்ப்பா, நாம சதாசிவம் பெரியப்பாவ வச்சே பேசலாம்” என்றான் அவர்தான் திவ்யா சாதகம் இவர்களுக்கு கொடுத்தவர். 

“என்னம்மா நீங்க ஒன்னுமே சொல்லல?” அமைதியாக இருந்த பாக்யத்திடம் கேட்க,

“உங்களுக்கு பிடிச்சா சரித்தான். இதுல நாஞ்சொல்ல என்ன இருக்கு? என்ன ஒன்னு, அந்த செல்வியோட சொந்தம்கறதுதான் நறுக்குங்குது. ஒன்னுக்குள்ள‌ ஒன்னுன்னு ஆயிட்டா நல்லது கெட்டதுக்கு அவ மூஞ்சியிலயும் முழிக்கணும்.” 

“அதெல்லாம் பாத்தா நல்ல சம்பந்தம் அமையாதும்மா. இப்பவே பாத்திரக்கடை முழுவதும் செழியன் பொறுப்புதான். தேனிலயும் புதுக்கடைக்கு இடம் பாக்குறாங்க.” 

அவர்களுக்குள் பேசிவைத்துக் கொண்டனர்.  இப்பேச்சு ஆரம்பித்தவாக்கில் அவர்களுக்குள்ளேயே அப்படியே நிற்கிறது. வீட்டிற்குள் பேசிக்கொண்டது காத்துவாக்கில் முத்துப்பேச்சி காதில் விழ, இதோ, அதோ எனத்தயங்கி, செழியனுக்கு அவளே அழைத்துவிட்டாள். அன்றிலிருந்து தொட்டுத் தொடர்கிறது இவர்களது அலைபேசி பந்தம். 

இன்று அவனை எதிர்பார்த்திருந்தவள், அவன் வராத கோபத்தில் நேரங்காலம் பார்க்காமல் அழைத்துவிட்டாள். இது வழக்கமாக அவள் அழைக்கும் நேரமில்லை. 

இருபக்கமும் நிசப்தம் கலையப்படாமல் கைபேசியை காதில் வைத்தவாறே இருக்க, சற்று நேரத்தில் இவன் வாய்விட்டு சிரிக்க, 

“கேடி முத்துக்கருப்பன்.” பல்லைக்கடித்து சிணுங்கியது எதிர்முனை. சற்று நேரம் சீண்டலும், சிணுங்கலும், சமாதானமுமாக கழிய,

“முத்து…” ரகசியம் போல் குரல் குழைந்து அழைக்க,

“ம்ம்ம்…” மட்டும் கொட்டினாள்.

“அடியேய், பேச்சி!”

“என்ன்ன்ன?”

“இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லல. பேச்சமாத்திட்ட. நான் கேட்டது கிடைக்குமா?” என்றான் விஷமமாக. 

அந்தப் பக்கம் தலையில் அடித்துக் கொண்டவள் அமைதியாகவே இருக்க, கண்டிப்பாக கோபத்தில் சிவந்திருப்பாள் எனத் தெரிந்தும், 

“என்ன, வெட்கத்துல பேச்சு வரலியா?” அவளை மீண்டும் சீண்ட,‌

“கருப்பண்ண்ண்…” பல்லைக்கடித்தவள், 

 “வெட்கம் வந்தாதான் சிவக்கணுமா. கோபம் வந்தாலும் சிவக்கும். இதமட்டும் நேர்ல கேட்டுருந்தீங்க, என்ன பண்ணிருப்பேனு எனக்கே தெரியாது. இப்படித்தான் விவஸ்த்தையில்லாம வயசுப்பிள்ளைகிட்ட கேப்பாங்களா?” காளி அவதாரமெடுக்க,

“அப்படியென்ன பெருசா கேட்டுட்டேன். நான் பாத்தது சின்னதா இருந்தது. பெருசு பண்ணமுடியுமானு கேட்டேன். இது ஒரு தப்பா?” அலட்டலில்லாமல் கேட்க, இப்பொழுது எவ்வளவு முயன்றும் முகம் சிவப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. 

“கெடைக்கலைனா அதுக்கு வேற ஒரு யோசனை வச்சிருக்கேன்.”

“என்ன யோசனை.‌ எப்படி பெருசு பண்ணுவீங்க?” ஆர்வத்தில் தான் முறுக்கிக் கொண்டிருப்பதை மறந்து கேட்டுவிட,

“அது கல்யாணத்துக்கப்பறம்தான் சொல்லமுடியும். நான் ரொம்ப டீசன்ட்டாக்கும்.” 

“பெருசா கேட்டதுலயே உங்க டீசன்ஸி தெரியுது முத்துக்கருப்பன்.” பெண்ணவள் பொய்க்கோபம் காட்ட, வாய்விட்டு சிரித்தான்.

“ரொம்ப சிரிக்காதீங்க! இன்னும் பேச்சு பேச்சாத்தான் இருக்கு. எங்க வீட்லயும் இன்னும் முடிவு பண்ணல. உங்க அண்ணனுக்கு சீக்கிரம் முடிக்க ஏற்பாடு பண்ணுங்க. அப்பதான் நம்ப பேச்ச எடுப்பாங்க.” 

என்ன பேசினோம், ஏது பேசினோம் எனத் தெரியாமல் மீண்டும் பேச்சு வளர, கேட் திறக்கும் சப்தத்தில், யாரோ வருவதாகச் சொல்லிவிட்டு அவசரமாக அழைப்பை துண்டித்தான். 

உள்ளே வந்தவர்களைப் பார்த்தவன், “டேய்! வாங்கடா!” ஆர்ப்பாட்டமாக வரவேற்க, கூசியபடியே உள்ளே வந்தனர். 

வேந்தன் யாரென எட்டிப் பார்க்க, “என்னடா தயங்குறீங்க. வாங்க.” 

யாரிடமும் சட்டென ஒட்டமாட்டார்கள் எனத் தெரிந்து வேந்தனே எழுந்துசென்று கைபிடித்து அழைத்துவந்தான். 

மங்கை கேள்வியாக பார்க்க, “சித்தி பையனுக” என்றான். 

அவள் ஆராய்ச்சியாய்ப் பார்க்க, “இவனுக்குதான் உன்னை சித்தி பொண்ணு கேட்டாங்க.” அவள் மனதில் நினைத்ததை சரியாகக்கூறி சிரிக்க, வேந்தனை முறைத்துப் பார்த்தாள். 

பெரியவன் மங்கையை நிமிர்ந்து பார்க்கக்கூட சங்கடப்பட்டான்.‌ ஒருவன் மீசை அரும்பிய இளந்தாரி. கல்லூரி இரண்டாம் வருடம். இன்னொருவன் இன்னும் குழந்தை முகம். பள்ளி இறுதி வருடம். 

“மாமாவப் பாக்கணும்” என்றனர்.

“முதல்ல உக்காருங்கடா. அதுக்கு முன்ன சாப்பிடுங்க” என்றான்.

“இல்லண்ணே சாப்பிட்டுதான் வந்தோம்.” என்றனர் ஒருசேர. வேந்தன் மங்கையைப் பார்க்க, டீ போட உள்ளே சென்றாள். இன்னும் நின்று கொண்டிருந்தனர். 

வேந்தன், “அட வாங்கடா” என இழுத்து சோஃபாவில் அருகில் அமர்த்திக் கொண்டான்.

டீ எடுத்து வந்து கொடுக்க, 

“தாங்க்ஸ்!” என்றான் பெரியவன். 

“என்னடா மூனாம் மனுஷன் மாதிரி தாங்க்ஸ் சொல்ற. அதுவும் மொட்டையா?” என அதட்ட, 

மீண்டும், “தாங்க்ஸ் மதினி!” கூச்சத்தோடு சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர்.‌ 

மருந்து குடித்து சற்று கண்ணசந்தவர், பேச்சு குரல் கேட்டு, அவரே எழுந்து வெளியே வந்தார். 

தங்கையிடம் காட்டிய வெறுப்பை தங்கை மகன்களிடம் காட்ட முடியவில்லை. 

“வாங்கடா!” முகம் மலர வரவேற்க, 

“எப்படி மாமா இருக்கீங்க?” எழுந்து நின்று நலம் விசாரித்தான் பெரியவன். கையில் இருந்த பையை மாமனிடம் கொடுத்தனர். அதில் அவர் கொடுத்தனுப்பிய பணம் அப்படியே இருந்தது. 

அபாய மணி அடித்துவிட்ட எச்சரிக்கையில் வீட்டிற்கு வந்த இரண்டு நாளிலேயே எல்லாவற்றையும் மகள் பெயருக்கு மாற்றும் முயற்சியில் மும்முரமானார். 

மங்கை வித்யாவிடம் பேசியதை அறிந்தவர் எப்படியும் பிரச்சினை பண்ணுவார் என ஊகித்தார். வீடு மட்டும்தானே பொது. மற்றதில் பங்கு கேட்கமுடியாது. அது அவரது தனிப்பட்ட சம்பாத்யம். வீட்டின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு காசாக கொடுக்க முன்வந்தார். அதுவே பல லட்சங்களைத் தாண்டியது. 

வித்யாவதி வீட்டில் தான் பங்கு வேண்டுமென விடாப்பிடியாக நின்றார். வீட்டுப்பக்கம் வந்துறாதே என மங்கை சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு. பையன் இருந்தால்கூட விட்டுக்கொடுக்கலாம். அவளுக்கு இருக்கும் உரிமை எனக்கும் இருக்குல்ல என்ற எண்ணம்.

 இதுவரை அவருக்கு செய்ததை கணக்குப் போட்டு கணபதி இதெல்லாம் கொடுத்துவிட்டு நீ வீட்டை எடுத்துக்கொள் என முடிவாக நின்றுவிட, வேறு வழியில்லாமல் காசுவாங்க ஒத்துக்கொண்டார். 

“மாமா! எவ்ளோதான் கொடுப்பீங்க? எவ்ளோ செஞ்சாலும் சித்திக்கு மனசு மேவாது. கடன்ல இருந்த நிலத்தை திருப்பிக் கொடுத்தீங்க. இப்ப அவிங்க காலேஜூக்கும் நீங்கதான் பாக்குறீங்க.”

“விர்றா! வருஷம் பூரா அழறத ஒரே நாள்ல அழுதுட்டுப் போயிறலாம்” என முடித்துக் கொண்டார். 

“நான் கூட வேற ஒன்னு எதிர்பார்த்தேன்” என்றான் எங்கோ பார்த்தவாறு.

“என்னடா எதிர்பாத்த?”

“இதச்சாக்கா வச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவீங்கனு நெனச்சேன்.” தன் மனது ஆசையையும் மாமனுக்கு கோடிகாட்ட,

“இப்பவும் சொல்றேன்.‌ கட்டாயப்படுத்தியோ, சூழ்நிலைய காரணம் காட்டியோ எம்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணமாட்டேன்.” 

உறுதியாகச் சொல்லிவிட்டாலும், அடிமனதில் அந்த ஆசை எழாமல் இல்லை. ஆஸ்த்தியை மகள் பெயருக்கு மாற்றுவதெல்லாம் அவரது மன திருப்திக்காக மட்டுமே. அவளை வேந்தனுக்கு கட்டிக் கொடுப்பதில்தான் அவரது மனநிம்மதியே அடங்கியிருக்கிறது. அதுவரை அவருக்கு அல்லாட்டம்தான். மரணத்தை தொட்டுவந்த பிறகு அது ஒருபக்கம் அரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்னும் படிப்பு முடியாத நிலையில் மகளிடம் எப்படி கேட்பதென்ற யோசனை. சீக்கிரம் மகளிடம் பேசவேண்டுமென முடிவெடுத்தார். 

அக்கா வீட்டிற்கே வரவைத்து காசைக் கொடுத்தபிறகுதான் வித்யாவதி பத்திர அலுவலகம் வந்து கையெழுத்தே போட்டார். மகளைப் அசிங்கப்படுத்தி பேசியதை மனதில் கொண்டு இதோடு ஒட்டு உறவு இல்லையென கணபதி கூறிவிட, 

“என்னமோ நீ கொடுத்துதான் நான் பொழைக்கிற மாதிரி சொல்ற? ஆட்டிட்டிப் போற கைய நீட்டிட்டுப் போனா போடுற மகராசன் போட்டுட்டுப் போறான்.‌” 

கெத்தாக சொல்லிவிட்டு வாங்குவதை வாங்கிக்கொண்டுதான் கிளம்பினார். பிச்சையெடுத்தாவது பிழைத்துக் கொள்வேன் என்பதை இவ்வளவு திமிராக யாரால் சொல்லமுடியும்.‌ ஆனால் அதே திமிரும், ரோசமும் செயலிலும் இருந்திருந்தால் மரியாதையாவது மிஞ்சியிருக்கும். 

பேச்சிலும் அருவா வீச்சு இருப்பது மண்மனம் மாறாத நம் சொலவடைகளில்தான். ஒரு பக்கத்துக்கு சொல்ல வேண்டியதை ஒரே வாக்கியத்தில் நறுக்கென்று சொல்லிமுடித்துவிடும். 

“என்னங்கடா இது?” தங்கை மகன்களிடம் கேட்க, 

“அம்மா பேசுனத மனசுல வச்சுக்காதீங்க மாமா. எங்களுக்கு இதவிட அதிகமாவே செஞ்சுருக்கீங்க. எங்களுக்கு உங்க உறவுதான் மாமா வேணும். பணம் வேண்டாம்” என்றான். 

“ஒட்டுறவு இல்லைனு சொன்னீங்களாம். இப்பதான் எங்க அப்பா பண்ணின அசிங்கம் கொஞ்சம் கொஞ்சமா மறைய ஆரம்பிச்சுருக்கு. விநாயகம் பஸ் கம்பெனி குடும்பத்த சேந்த பையனுகன்னு எங்க அடையாளம் மாறியிருக்கு மாமா. எங்களுக்கு அதுதான் வேணும். எங்கப்பா கறை எங்க மேல விழறது பிடிக்கல மாமா” என சொல்ல,‌ அவர்கள் சொல்லிய தொனியில் மனம் கனத்துப் போயிற்று அனைவருக்கும். 

மங்கைக்கு தன்னைப் பார்ப்பது போலவே இருந்தது. பத்தொன்பது வயதுப் பையன் தன் பெரியம்மா வீட்டினரிடம் பழக இவ்வளவு தயங்கினால் அப்பாவைக் கொண்டு எவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்க வேண்டும். அந்தத் தாழ்வுமனப்பான்மை தானே இன்றைய இவர்களின் தயக்கத்தின் வெளிப்பாடு. இது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடாதா? இவளும் இவர்களைப் போலத்தான் சொந்த பந்தங்களிடமும், பள்ளியில் தோழமைகளுடனும் கூட கூசிக்கூசியே பழகினாள். தாயில்லாபிள்ளை என்ற பரிதாபப் பார்வை ஒருபக்கம் என்றால், ஓடிப் போனவள் மகள் என்ற ஏளனப் பார்வை மறுபக்கம்.‌

பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என அம்மா செய்த தப்பிற்கு இன்றளவும் சிலுவை சுமப்பது இவள்தானே. சென்றாயன் மகன்களாகப் பார்க்கப்படும் இவர்களுக்கும் அதே நிலைமைதானே. ஆனால் ஒருவிதத்தில் மெச்சிக் கொள்ளலாம். குணம் கெட்ட பெற்றவர்களுக்குப் பிறந்த இவர்கள் இதுவரை வழி மாறாமல் இருப்பதே யார் செய்த புண்ணியமோ. 

மாமனிடம் பயம் உண்டு. சென்றாயனைச் சேர்ந்தவர்களும் ஒதுக்கிவிட, அப்பனுக்குப்புள்ள தப்பாம பொறந்திருக்கு என்ற பெயர் எடுத்துவிடக்கூடாதென, அந்த ஊரில் இருக்கவிடாமல் விடுதியில் சேர்த்துவிட்டார். இன்றளவும் தன் கண்காணிப்பில்தான் வைத்துள்ளார். 

ஒதுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும்தானே பாதைமாற வழிவகுக்கிறது. இவர்கள் குப்பையில் முளைத்த குன்றிமணிகள். அவர்கள் விடுமுறைக்கு வீடு செல்ல, வித்யாவதி வீட்டிற்காக காசு வாங்கிக் கொண்டு கையெழுத்துப் போட்டது தெரிந்தது. அங்கேயே வித்யாவை கண்டமேனிக்கு சாடிவிட்டு, பணத்தையும் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தோடு,‌ மாமனை நலம் விசாரிக்க இருவரும் வந்தனர்.

“என்னைக்குனாலும் மாமன் இருக்கேன்டா. இதையும் வச்சுக்கோங்க. அடுத்து இவன காலேஜ் சேக்கணும்ல. ஏதொன்னுக்கும் அடுத்தவங்கள எதிர்பாக்காம சொந்தக்கால்ல நிக்கப்பாருங்கடா!” 

புத்திமதி சொல்லி சாப்பிட வைத்தே அனுப்பிவைத்தார். இதுவரை செய்தாயிற்று. இனி அவரவர் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான். வித்யா மாதிரி ஆட்களுக்கு காலம்பூரா செய்தாலும் பத்தாது. 

கிளம்புகையில், “வர்றோம் மதினி, அம்மா பேசுனத மனசுல வச்சுக்காதீங்க!” பெரிய மனிதன் மாதிரி சமாதானக் கொடி பறக்கவிட்டுச் சென்றனர்.

*****

“என்ன நேரம்னு காலங்காத்தால  வாய் வச்சியோ தெரியல. அதே மாதிரியே ஆகிப்போச்சு.” 

“அப்படி என்னத்தடி கேட்டேன்?”

“நீதானே அன்னைக்கு இந்த வருஷம் படிப்ப முடிப்பியான்னு கேட்ட?”

“அதனாலென்ன? என் வாய் முகூர்த்தம் நல்லதுதான நடந்துருக்கு. கல்யாணம் முடிச்சாலும் இதே பஸ்,‌ இதே சீட், இதே ஃப்ரெண்ட், இதே காலேஜ். ஆனா இனிமே அண்ணே சாமிக்கு மட்டும் பூ வாங்கமாட்டாங்க. உரிமையா கையில கொடுப்பாரு. மாட்டேன்னு சொன்ன ரெண்டு அப்பு அப்பி தலையிலயே வச்சு விடுவாரு.” 

அதுதானே அவளது பயமும். அது தெரிந்துதானே அவனது பார்வை உரிமையாக தன்னைத் தொடர்வது தெரிந்தும் முயன்று தவிர்த்துக் கொண்டிருந்தாள். 

அப்பாவின் மனநிம்மதிக்காக உங்கள் இஷ்ட்டம் என சொல்லியாகிவிட்டது. கல்யாணம் என்றதும் தன்னால் முடியுமா என்ற பயம் தன்னால் வந்து சட்டமாக அமர்ந்து கொண்டது. காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது. ஆனால் கல்யாணம் என்பது அடுத்த கட்டம் தொடவேண்டுமே? தொட்டதைத் தொடர முடியுமா? தொடர்ந்தால் தன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா?

இப்படி எத்தனையோ முடியுமாக்களை அடுக்குப்பானையாட்டம் அடுக்கிக் கொண்டிருந்தவள், கல்யாண நாள் நெருங்க நெருங்க தனக்குள்ளேயே பயந்து, தவித்து, மருகிக் கொண்டிருக்கிறாள் பெண்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top