மல்லி 32 final

         செழியன் வெட்ஸ் முத்துப்பேச்சி.

ஒருவழியாக அப்படி ஒருத்தன் இருப்பது வீட்டார் கண்ணுக்குத் தெரிய, குழந்தை பிறந்த ஏழாவது மாதம் இவர்கள் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. 

வீட்டின் கடைசி கல்யாணம். கடலை மிட்டாயோடு பந்தி பரிமாறப்பட்டது. அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பெரியவர்கள் ஒதுங்கிக் கொள்ள, வேந்தனும், மதியழகனுமே முன்னின்று நடத்தினர். 

என்னதான் பெண்வீட்டாராக தங்கைக்கு சீர் செய்தாலும், மைத்துனன் முறைக்கும் மதியழகன் தனித்து சீர் செய்தான்.  

பார்ப்பவர்களை எல்லாம் சுண்டியிழுக்கும் அழகோடு, பொக்கைவாய் காட்டி சிரித்து மண்டபத்தில் எல்லார் கைகளிலும் ஒரு முறையாவது தவழ்ந்து வந்தன இரட்டைகிளிகள். தீபஷ்வினி, தேஜஷ்வினி.

“பிள்ளைகளுக்கு வீட்டுக்கு போனதும் மறக்காம சுத்திப்போடணும்.” மங்கையிடம் சொல்லிவைத்தார் தாமரை. 

கணபதிக்கு பேத்திகளே உலகம். மாற்றி மாற்றி ஏதாவதொன்று தோளில் இருக்கும். பேத்திகள் வந்த பிறகு இரண்டு தாத்தாக்களுமே ரொம்ப பிஸி. 

மறு வீட்டு சம்பிரதாயங்கள் முடித்து, மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பிள்ளைகள் மூன்றுக்கும் இரவு படுக்கும் முன் சுற்றிப் போட்டார். 

“பொம்பளப் பிள்ளைகனாலே அழகுதான். இல்லீங்க?” திவ்யா கணவனை ஓரப்பார்வை பார்க்க, 

“அதான் ஒன்னுக்கு ரெண்டா அண்ணன்‌பிள்ளைக இருக்கே. கொஞ்சிக்கோ” புரியாததுபோல் பார்த்துவைக்க, தனியா சிக்கும்போது உங்களுக்கு இருக்கு என்றது திவ்யாவின் அனலடிக்கும் பார்வை.

இரவு மணமக்களுக்கான தனிமையை ஒதுக்க, 

உள்ளே வந்தவளை, தாழ்போட்டு திரும்பும் முன் தாவி அணைத்துக் கொண்டான். 

“கருப்பன்! என்ன அவசரம்? பால் சிந்தப்போகுது.” பேச்சி கடிந்துகொள்ள,

“ஒருத்தன வருஷக்கணக்கா காக்க வச்சுட்டு என்ன அவசரம்னா கேக்குற?”

“அதுக்குனு இப்படியா? ஏதோ, எதுலயோ பாஞ்ச மாதிரின்னு சொல்வாங்களே?”

“காஞ்ச மாடுன்னே சொல்லு. நோ ப்ராப்ளம்” வாய்‌தான் பேசியதே ஒழிய,‌ கை இடையில் அத்துமீற ஆரம்பிக்க, இனி தாங்காதென விளக்கை அணைக்க சொன்னாள். 

“இன்னும் அளவெடுக்கலடி.”

“எதுக்கு?”

“மூனு தேவைப்படுமா, நாலு தேவைப்படுமானு தெரியலயே?”

“எதுக்குன்னு விளக்கமா சொல்லித் தொலைங்க.” அவள் பொறுமை பறந்தது.

“இதுக்குதான்.” தன் கையிலிருந்த நகை டப்பாவைத் திறக்க, அதில் குழந்தைகளுக்குப் போடும் அரணாக்கொடி மூன்று ஒன்றோடொன்று கொக்கியில் இணைக்கப்பட்டிருக்க,

“கருப்பண்ணன்” என்றாள் பல்லைக்கடித்து. 

புருவம் தூக்கி என்னவென்று கேட்க, “இது குழந்தைகளுக்கு போடறது.”

“எனக்கு தெரியாதா? அன்னைக்கே சொன்னியே? நான்தான் பெருசு கிடைக்குமான்னு கேட்டேன். நம்ம பக்கம் அந்த பழக்கமில்லைனு சொல்லிட்ட. அதான் இதையே மூனு, நாலு வாங்கி ஜாயின்ட் பண்ணிட்டேன்.” எப்படி என் சாமர்த்தியம் என்பது போல் கண்சிமிட்ட,

“இதுக்கு ஆன்லைன்லயே வாங்கியிருக்கலாமே?”

“நானும் பாத்தேன். அதுல இது இல்ல” அவன் அசட்டுச் சிரிப்போடு, கையில் எடுத்துக் காட்டியதைப் பார்த்து, இவளுக்குதான் வெட்கம் மானவாரியாக பொங்கிவளிந்தது.

“ஐயோஓஓஓ… கருப்பன். மானத்தை வாங்காதீங்க. அது குழந்தைகளுக்கு மட்டும்தான் போடுவாங்க.”

“நாம மாத்துவோம். இப்ப பேச நேரமில்ல. அளவு சரியாயிருக்கானு பாக்கணும்” அவசரமாக விளக்கை அணைத்தவன் அளந்த அளவைகள் அனைத்தும் ஏட்டிலும், எழுத்திலும் அடங்காதவை. 

*****

ஐந்து மாதங்கள் கழித்து…

“மாமா!”

“ம்ம்ம்” என்றவன் நெற்றிமீது கை மடக்கிவைத்து கண் மூடி படுத்திருந்தான். 

“நம்ம ஆகாஷ் இன்னைக்கி விசேஷத்துல சூப்பரா இருந்தான்ல. பேன்ட், ஷர்ட் போட்டு, ஷு போட்டு ஜம்முனு ராஜா மாதிரி இருந்தான் “

“ம்ம்ம்”

“நானென்ன கதையா சொல்றே. ம்ம்ம் கொட்டுறீங்க?” அவன் மார்பு மீது கைவைத்து அதில் முகம் பதித்திருந்தாள். திவ்யாவின் மகன் ஆகாஷைப் பற்றிதான் மங்கை பேசிக்கொண்டிருந்தாள். 

“நீ எங்க சுத்தி எங்க வர்றேன்னு தெரியுது. பேசாம படுடி.” கண் திறக்காமலே பதில் கொடுக்க,

“க்க்கும்… ரொம்பத்தான்.”

“…”

“மாமா!”

“…”

“டேய்… இளா!”

“என்னடி வேணும்?”

“யோவ் மாமா! நாம்பாட்டுக்கு தனியா லூசு மாதிரி பொலம்பறே. நீரு ம்ம் கொட்டுறீரே?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டும் முழிச்சுறும். மாமா தூக்கிட்டு வந்துருவாங்க. அதுக தூங்கும் போதே நீயும் தூங்கிக்க. என்னையும் தூங்கவிடு. இன்னைக்கு அலைச்சல் வேற.”

இன்று வீரபாண்டி கோவிலில் பிள்ளைகளுக்கு பதினொரு மாதக் கணக்கிற்கு கிடாவெட்டி, முடியிறக்கி, காதணி விழா நடந்து முடிந்திருந்தது. மாரியம்மாளும் கொள்ளு பேத்திகளுக்கு சபை நிறக்க செயினும், கொலுசும் கொண்டுவந்து போட்டார். விசேஷம் முடிந்து அனைவரும் வீடு திரும்ப இரவாகிவிட்டது. பிள்ளைகள் வரும்பொழுதே தூங்கிவிட கணபதி தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார். 

“அதெல்லாம் தூக்கிட்டு வரமாட்டாரு. அத்தைதான் பால்குடி மறக்கடிக்கணும். ராத்திரி எங்ககிட்டயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க.” வாய்க்குள்ளேயே முனமுனுக்க, சிரித்துவிட்டான். 

வெகு நாட்கள் கழித்து இன்று அவள் மல்லி வைத்திருந்ததன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது. பிள்ளைகளுக்கு பால் கொடுத்ததால் இத்தனை நாட்களாக மல்லிகைப்பூ வைத்ததில்லை. என்னதான் மாற்றுணவு, புட்டி பால் என கொடுத்தாலும், இரண்டும் அம்மாவைத் தேடுவதை தவிர்க்க முடியவில்லை. அதனாலேயே மங்கை இன்னும் உடம்பு தேறாமல் இருந்தாள். பால்குடி மறக்கடிக்கச் சொல்லியும் ஒரு வருடம் போகட்டுமென இவளும் வீம்பு பிடித்தாள். 

இன்றுதான் விசேஷமென பூவும், புடவையுமாக இருந்தவளை, அவள் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருக்க சிரமப்பட்டு போனான். கண்திறந்து பார்த்தவன்,

“உசுப்பேத்தாம படுடி. இன்னும் ஒரு வருஷம் கூட முடியல. அம்மா கொண்டே போடுவாங்க. அதுக்கு மேல உங்கப்பா. இன்னும் என்னய வில்லனாட்டம் பாக்குறாரு.”

“அம்மாவுக்கு பயந்த புள்ளைதான்.” அவனை மேலும் சீண்டிவிட,

“வேண்டா, ஏற்கனவே நோஞ்சானா இருக்க. மறுபடியும் குழந்தைனா உடம்பு தாங்காது சொல்லிட்டே.”

“நம்ம ஆகாஷ் மாதிரி ஒரே ஒரு பையன் மாமா.‌ ரெண்டும் தாத்தா கோண்டா போயிட்டாளுக.”  

மீசையைப் பிடித்து இழுத்தவளை முறைத்துப்பார்க்க, இதற்கெல்லாம் அசரமாட்டேன் என மோகனமாய்‌ சிரித்து வைத்தாள். 

“ஆத்தாடி! இது ஆகாது. நீ சேலைய மாத்தாம இருக்கும்போதே தெரியும்டி. பேசாமப்படு. எதுனாலும் ஒரு வருஷம் போகட்டும்” என குப்புற‌ப்படுத்துக் கொண்டான்.‌ 

“ஒரு வருஷத்துக்கு என்ன ரொம்ப தூரமா இருக்கு.” விட்டேனா பார் என முதுகில் ஏறி படுத்துக் கொண்டாள். தோள்வளிந்த மல்லிச்சரம் அவன்‌ முகத்தில் பட்டு உரச, செவியோரம் இதழ்களை இழையவிட்டவளை,

“ஏன்டி படுத்தற?” என,

“ஒரே பையன் மட்டும்” என்றவள் வலிக்க கன்னம் கடிக்க, 

“ராட்சசி! நாம என்ன செஞ்சா வச்சுக்க முடியும்? அதுவும் பொண்ணா இருந்தா என்னடி பண்ணுவ?”

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி மாமா. உங்களால முடியும்.” அவன் தோள் தட்டி சொல்ல, வாய்விட்டு சிரித்தவன், அவளைப் புரட்டிப்போட்டு மேலே படர்ந்தான். 

“அடங்கமாட்ட” என அவளை‌ அடக்கும் வழியைக் கையாண்டவன், இதழ்களை சிறை செய்த நேரம் கதவு தட்டப்பட, வேகமாக விலகிக் கொண்டான். 

மங்கை எழுந்து கதவைத் திறக்க, வாசலில் தாமரை இரண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு நின்றார். இரண்டும் இவளைப் பார்த்ததும் தாவிக்கொண்டு வந்தது. அழுததில் முகம் ரோஜாப்பூவாய் சிவந்திருந்தது. 

“இந்தாடியம்மா! பகலெல்லாம் வச்சுக்கலாம்போல. ராத்திரி சமாளிக்க முடியல. காது குத்துனதால நைநைங்குதுக.” புட்டி பாலோடு பிள்ளைகளை கொடுத்தவர், அவளை ஒரு கணம் ஊன்றி கவனித்தவர்,

“இன்னும் ஒரு வருஷம் கூட முழுசா முடியல. அவங்கிட்ட சொல்லிவை!” குனிந்து மெதுவாக எச்சரிக்கை விட்டுச்சென்றார். திரும்பி கணவனைப் பார்க்க, 

“ஆத்தீஈஈ” அவள் உள்மனம் அலறியது.

 அவனது துர்வாசர் பார்வையில் இவள் பஷ்பமாகாததுதான் மிச்சம். 

என்னதான் பகலெல்லாம் தாத்தாக்களுடன் இருந்தாலும் இரவானால் பெற்றவர்களின் வாசம் வேண்டும் இரண்டிற்கும். 

அவனிடம் ஒரு குழந்தையை கொடுத்தவள், தன் மீது ஒன்றைப் போட்டு படுத்துக் கொண்டாள். மார்மீது ஆளுக்கொன்றாய் போட்டு தட்டிக் கொடுக்க, ஒரு மணி நேரமாக தாமரைக்கு ஆட்டம் காட்டிய இரண்டு பூஞ்சிட்டுகளும் அடுத்த ஐந்தாவது நிமிடம் கண்ணயர்ந்து விட்டனர். திரும்பி அவனைப் பார்க்க நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“போயா!” சத்தம் வராமல் வாயசைக்க,

“போடி!” என்றான்‌ அதேபோல். 

“மொசக்குட்டி, பூனக்குட்டினு கிட்ட வருவீங்கள்ல அப்ப வச்சுகிறேன்.” பல்லைக் கடித்துப்பேச,

“வச்சுக்கோ… வச்சுக்கோ…” என கமுக்கமாய் சிரித்தான்.

 சற்று நேரத்தில் பிள்ளையை மேலே போட்டவாரே அவளும் கண்ணசந்து விட்டாள். மெல்லத் தன்னிடமிருந்த மகளை கீழே சரித்து விட்டவன், அவளிடமிருந்தும் பிரித்து சுவரோரமாக மெத்தையில் இருவரையும் படுக்கவைத்தான். 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை தன் பக்கம் திருப்பி கையணைவில் வைத்துக் கொண்டான். மார்பில் முகம் தேய்த்தவள், அவன் வாசம் உணர தூக்கத்திலும், 

“மாமா” என தன்னால் வாயசைய, நெற்றியில் முத்தம் பதித்து புன்னகையோடு அவளை இறுக்கிக்கொள்ள, அவளும் மார்போடு சிறுபிள்ளையாய் ஒன்றிக்கொண்டாள். மல்லி வாசத்தோடு மங்கையவளின் நேசத்தின் வாசமும் அவன் நெஞ்சம் முழுதும் நிரம்பித்தழும்பியது. 

தேன் மல்லிப் பூவே 

பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என் மன்னா

நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே…

முத்தாரம் மார் மீது தவழ்கின்றது

எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு 

தேருண்டு நீயுண்டு திருநாளுண்டு

திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா

உலகமெல்லாம் ஒரு நிலவு

இதயமெல்லாம் ஒரு நினைவு

என் வாழ்வின் ஆனந்தம் நீயே…

தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என் மன்னா

நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே… 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top