“நீ எத்தனை தடவை அளந்தாலும் பத்துக்கு பத்து தான்டி இந்த ரூம்.”
அடுக்களை வாசலில் நின்றவன் குரல் காதில் விழாதது போல் விளக்கிவைத்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து அலமாரியில் அடுக்குவது போல் மீண்டும் அந்த அறையை சர்வே எடுக்க,
“அரசி!”
“…”
“அடியே மங்கம்மா!”
“…”
“மொசக்குட்டி!”
கையை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு, கதவு நிலையில் சாய்ந்தவாறு பெயரை விதவிதமாக ஏலம் விட்டவனை திரும்பிப் பார்த்தாள். மடித்துக் கட்டிய கைலியும், வெள்ளை பனியனுமாக ஒரு காலை மடித்து, வாசல்நிலையில் சாய்ந்து நின்றிருந்தான்.
“இது மட்டும்தான். துடச்சு வச்சுட்டு வந்துர்றேன்.” அலட்டிக்காமல் சொன்னவள், துடைத்த அடுப்பு மேடையை மீண்டும் துடைக்க ஆரம்பித்தாள்.
கோவிலுக்கு சென்று வந்ததிலிருந்தே மந்திரித்துவிட்ட கோழியாக அவள் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்க அவனுக்குள் சிரிப்பு பொங்கியது. முயன்று அடக்கிக் கொண்டான்.
“தூக்கம் வந்தா நீங்க போய் தூங்குங்க மாமா. ஏன் நிக்கறீங்க?” அக்கறையாய் சொல்ல,
“அடிங்க…” என வேகமாக உள்ளே வந்தவன், அவள் கையிலிருந்த ஈரத் துணியை பிடிங்கி வீசிவிட்டு,
“படுத்தாதடீ! மொத நாள் ஸ்கூலுக்குப் போற பிள்ளையாட்டம் ரொம்ப பண்ற.”
தோளில் கைவைத்து தள்ளாத குறையாக தள்ளிக்கொண்டு வந்தவனை, முகத்தை மட்டும் பின்னால் திருப்பி பாவமாய் பார்த்தாள். அவளை அப்படி பார்க்க அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“மொசக்குட்டி இப்ப எதுக்கு பப்பி லுக் விடுது.” புருவம் உயர்த்தி கேட்க, முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து கண்முன் வராமல் ஏதோ வேலை செய்வது போல் தாமரையை ஒட்டிக் கொண்டுதான் திரிந்தாள்.
இவர்கள் கோவிலுக்கு கிளம்பி வெளியே வர, மதியழகன் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான். இப்பொழுதும் அவன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ரூபி பிங்கில் ஆர்கன்சா சேலையைத்தான் உடுத்தியிருந்தாள். அதே மாணிக்க சிவப்பில் தங்கக்கலரில் ஆரி வொர்க் செய்யப்பட்ட ப்ளவுஸ். தென்னம்பாலை நிறத்து மேனியோடு போட்டி போட்டி அசரடித்து, வேந்தனை பித்துப்பிடிக்க வைத்தது.
போதாக்குறைக்கு முதல்நாள் அவன் வாங்கிக்கொடுத்த மல்லி ஃப்ரிட்ஜில் அப்படியே இருக்க, அதையும் எடுத்து தாமரை தலைநிறைய வைத்துவிட்டு, கன்னம் வளித்து திருஷ்டி எடுக்க, கிறுக்குப் பிடிக்காத குறை வேந்தனுக்கு.
வெளியே வந்து என்ஃபீல்டை கிளப்ப, பின்னால் ஏறியவள் கை, தன்னால் அவனது இடையை சொல்லாமலே வளைத்துக் கொண்டது. விசிலடித்தவாறே கலைந்த முடியை சரிசெய்வது போல் கண்ணாடியில் அவளைப் பார்த்து கண்சிமிட்ட,
“கோயிலுக்குப் போகும் போது இதென்ன சேட்டை.” முறைத்துப்பார்த்து இடுப்பில் கிள்ள,
“இப்ப நீ பண்றதுக்கு பேருதான்டி சேட்டை. பதிலுக்கு நானும் கிள்ளவா. அதுவும் நீ கிள்ளின அதே எடத்துல?” பக்கவாட்டில் திரும்பி தனிந்த குரலில் சரசமாய் கேட்க,
“அதே எடத்துல தானே? நீங்களே கிள்ளிக்கோங்க. யார் வேண்டாம்னா. அத ஏன் எங்கிட்ட கேக்குறீங்க?” குதர்க்கமாய் பதில் சொன்னாள்.
“குசும்பு, இப்ப முடியாது. ஆனா கணக்கு வச்சுக்கறே.”
“சும்மா வெட்டியா பேசாம வண்டிய எடுங்க மொதல்ல.”
“வெட்டியாவா? எல்லாம் என் நேரம்டி.” அவளிடம் வம்பிழுத்துக் கொண்டே வண்டியை கிளப்பினான்.
வராக நதிக்கரையில் வீற்றிருக்கும் கௌமாரியம்மன் கோவில். எவ்வித சேதமுமின்றி தன்னவனை தன்னிடம் கொண்டுவந்து சேர்த்ததற்கு குழந்தை மாரியம்மனை மனமுறுக வேண்டி நன்றியை தெரிவித்து விட்டு, வேண்டுதலாக தொட்டிலையும் வாங்கி கட்டிவிட்டு வீடு வந்தனர்.
அதற்குள் தாமரை இரவு சாப்பாட்டிற்கு சட்னி, சாம்பார் எல்லாம் வைத்துவிட்டு எதிர்பார்த்திருந்தார். மகன் எப்பொழுது சாப்பிட்டதோ. வீட்டிலும் இன்று முழுதும் யாரும் சாப்பிடவில்லை. இவர்கள் வீடு வந்தவுடன் ஒரு அடிப்பில் தோசைக்கல்லை ஏற்றியவர், இன்னொரு அடுப்பில் இட்லியும் ஊற்றிவைத்தார்.
அதற்குள் கணபதி கடைக்குச்சென்று ஆட்டுக்கால் வாங்கிவந்து அக்காவிடம் கொடுத்திருந்தார். மஞ்சள், சீரகம், சின்னவெங்காயம் தட்டிப்போட்டு வேகப்போட்டு வைக்கச்சொன்னார். காலை எழுந்தவுடன் மருமகனுக்கு சூப் எடுத்து கொடுக்க.
மங்கையும் அடுப்படி வர, “சேலைய வேணா மாத்திட்டு வா மங்கா” என கூற, திரும்பியவள் வேந்தனைப் பார்த்தாள். அவன் பார்வை யாரும் அறியாமல் மறுப்பாக தலையசைத்தது.
“இருக்கட்டும்த்த. இப்பதானே கோயில்லருந்தா வந்தோம். படுக்கும் போது மாத்திக்கறேன்” என்றுவிட்டாள்.
‘படுக்கும்போதுதானே… மாத்திக்கலாம்… மாத்திக்கலாம்.’ விஷமமாகப் பார்த்து வைத்தான்.
செழியனும் சாப்பிட்டு தேனி கிளம்பிவிட்டான். கணபதியும் மாத்திரை போட்டு படுக்கச் சென்றுவிட, அதன் பிறகும் அடுப்படியில் வேலை இருப்பது போல் நேரத்தை கடத்தினாள். அம்மாவிடம் படுக்கப்போவதாக சொல்லிவிட்டு, அவளை சீக்கிரம் வரச்சொல்லி கண்ஜாடை காட்டிவிட்டு சென்றான்.
தாமரை உடனே இவளையும் போகச் சொன்னார்.
“இது மட்டும்தான் அத்த. கழுவிட்டு போயிர்றேன்” என சொல்ல,
மஞ்சளும், மிளகும் போட்டு பால்காய்ச்சி ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட்டு, எடுத்துப் போகச் சொல்லியவர், அவரும் படுக்க சென்றுவிட,
படுக்கையறையில் காத்திருந்தவன், பொறுமையிழந்து, ‘இன்னும் என்ன பண்றா?’ என அடுப்படி வந்தான்.
குட்டிபோட்ட பூனை போல் அடுக்களையையே சுற்றிக்கொண்டிருந்தாள். என்னதான் செய்கிறாள் என பார்க்கலாமேயென கைகளைக் கட்டிக் கொண்டு நிலையில் சாய்ந்து நின்றுவிட்டான். அவன் வந்ததும் தெரிந்தது. அவன் பார்வை முதுகைத் துளைப்பதும் நன்கு தெரிந்தது. அவள் பெண்மை அவள் அனுமதியின்றி அவனிடம் சரணாகதி வேண்டி நிற்பதும் புரிந்தது. வெட்கங்கெட்ட மனசு. தனக்குள்ளே திட்டியும் கொண்டாள். இருந்தும் தயக்கம் தடைபோட, விலங்கிட்ட கால்களாக நகர மறுக்க, இதற்கு மேல் தாங்காதென உள்ளே வந்தவன்,
“இதென்ன மொத நாளாடி. கையில பாலக்கொடுத்து அனுப்பி வைக்க.” தோளில் இருபக்கமும் கைவைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்.
“விடுங்க!” என தோளை உதறியவள்,
“பஞ்சாரத்துல கோழியெல்லாம் அடஞ்சிறுச்சான்னு பாத்துட்டு வந்துர்றேன்.” பின்பக்கம் நடையைக்கட்ட,
“சோதிக்காதடீ! இத்தன நாளா நீதான் அதெல்லாம் பாத்தியா. இன்னும் கொஞ்ச நேரத்துல சாமக்கோழியே கூவிரும்டி. அப்பறம் விடிஞ்சுறும்.” அழாத குறையாக அவளைப் பார்த்தான்.
“இல்ல, இன்னைக்கு அப்பா மறந்தாலும் மறந்துருப்பார்ல. அத்தை பால் காய்ச்சி வச்சுருக்காங்க. எடுத்துட்டு வந்துர்றேன்.” மீண்டும் அடுக்களைப்பக்கம் திரும்பியவளை,
“அடியேய்!” என உறுமியவன், சட்டென திரும்பி அவள் கைகளை எடுத்து கழுத்தோடு கட்டிக்கொண்டவன், முதுகில் சாய்த்து உப்புமூட்டையாய்த் தூக்கிக் கொண்டான். அறைக்குள் சென்று இறக்கிவிட்டு கதவடைக்க, அவளுக்கு தான்மூச்சு முட்டிப் போயிற்று.
அவளை தனித்துவிடாமல், கட்டிலில் அமர்ந்து கால்களுக்கிடையில் கிடுக்குப் பிடியில் வைத்துக் கொண்டான். அவள் கைகளை எடுத்து தன் தோளில் மாலை போல் போட்டுக்கொண்டவன், அவள் இடையை தன் கைவளைக்குள் கொண்டு வந்தான். கிட்டத்தட்ட சிறை செய்யாத குறையாக கைவளைக்குள் நிறுத்த, அவன் முகம் இருந்த உயரம் அவளது இதயத்தை தடம்மாறித் துடிக்கவைத்தது.
“என்னமா ஆட்டம் காட்டுற நீ.” முறைத்துப் பார்த்து குரலை உயர்த்த,
“இல்ல… அது வந்து…” தடுமாற்றமாக அவனைப் பார்த்து வைத்தாள்.
“அரசி! என்னை நிமிர்ந்து பாரு!” என அதட்டினான் தன்னை நேருக்கு நேராக பார்க்கத் தயங்குபவளை.
“எம்மேல நம்பிக்கை இல்லையா?” எனக் கேட்டவனை, நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் சிவந்திருக்க,
“என்னம்மா” என்றான் வாஞ்சையாக.
“இல்ல, நீங்க இவ்ளோ ஆசையா இருக்கீங்க. எங்க உங்கள சங்கடப்படுத்திருவேனோன்னு பயமா இருக்கு. என்னால முடியுமா?” குரல் கம்மியது. ஆசை எந்தளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு அச்சமும் கண்களில் தெரிந்தது. அவளது பயம், குழப்பம், தயக்கம் எல்லாம் புரிந்தது அவனுக்கும்.
அவளை நேருக்கு நேராக ஆழ்ந்து பார்க்க, பார்வை வீச்சு தாங்காமல் இமைக்குடை மீண்டும் சாய்ந்து கொண்டது. அவள் நின்றிருக்க, அவன் அண்ணார்ந்து பார்த்து பேசிக் கொண்டிருந்தான். தோளில் கிடந்த அவளது கையை எடுத்து உள்ளங்கையில் முத்தம் வைத்தவன், தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டான். கன்னத்தில் இருந்த கீறல், விபத்தை நினைவூட்ட விரல்நுனி அதனை மென்மையாக வருடிக் கொடுத்தது.
இனி நீ வாழப்போகும் ஒவ்வொரு நாளும் நான் உனக்கு கொடுத்த இரண்டாவது வாய்ப்பு என வாழ்க்கை சொல்லாமல் சொல்வதுபோல் அக்கீறல் அவளுக்கு உணர்த்தியது. கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாதென மனம் சங்கல்பம் மேற்கொள்ள, வாழ்ந்து பார்ப்பது என முடிவுக்கு வந்தாள்.
முடியுமா, முடியாதா என்ற கேள்விகளை தன்னைவிட்டு தள்ளிவைத்தாள். நிச்சலனமாய் தன்னை ஒப்புக்கொடுப்பது என முடிவுக்கு வந்தாள். மனம் சற்று குழப்பம் நீங்கி தெளிவு பெற, அவன் கண்ணோடு கண் நோக்க, மனம் முழுதும் நிரம்பித் தழும்பிய காதல் அவன் கண்களில் காமமாய் வளிந்தது. ஒருகரம் அவன் கன்னம் தாங்கியிருக்க, மறுகரம் தன்னால் அவன் தலை கோதியது.
“மொசக்குட்டி! எனக்கும் டென்ஷனாத்தான்டி இருக்கு” என்றவன் குரல் கரகரத்து குழைந்து ஒலிக்க, நடந்த விபத்தை நினைத்து டென்ஷனாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள். இன்னும் அதன் தாக்கத்திலிருந்து அவன் வெளிவரவில்லையோ என நினைத்தவள், அரவணைப்பதாக எண்ணிக்கொண்டு, அவனை மார்போடு சேர்த்தணைக்க, பூவுக்குள் புதைந்த வண்டாய் ஒரு கணம் மூச்சு முட்டியது அவனுக்கு. கோவிலில் கொடுத்த, திருமாங்கல்யத்தில் வைத்திருந்த தாழம்பூ குங்குமத்தின் வாசனையோடு, தலையில் சூட்டியிருந்த குண்டுமல்லியின் வாசமும், பெண்மையின் வாசமும் சேர்ந்து அவனை பித்தம் கொள்ளச்செய்ய, மார்பு மத்தியில் முத்தம் ஒன்றை அழுத்திப் பதிக்க, உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்து, சிவந்து நின்றாள் பெண்.
மனதின் அடிவேரில் இன்ப ஊற்றொன்று சில்லிப்பாய் பிரவாகமெடுக்க, மீண்டும் அண்ணார்ந்து தொண்டைக்குழியில் ஒரு முத்தம் பதிக்க, அவள் பிடி இளகி கால்கள் தள்ளாட, இவன் பிடி இடையில் இறுக்கி சேர்த்து அணைத்துக்கொண்டது. தனக்குள் கிளர்ந்த உணர்வுகளின் பிரளயத்தில் சிக்குண்டவளை, தன்மீது சாய்த்துக்கொண்டே கட்டிலில் பின்னால் சாய்ந்துவிட்டான். மேனி செம்பவளம் பூசிக்கொள்ள, நடப்பது என்னவென்று யூகிக்கும் முன் தலைக்கு மேலிருந்த விளக்கின் சுவிட்சை எட்டி அணைத்தும்விட்டான்.
“உனக்கு பிடிக்காதது எதையும் மாமன் செய்யமாட்டேன்டி, மாமன நம்புடி!” என சொல்லிச் சொல்லியே, வஞ்சியவளை கொஞ்சிக் கெஞ்சியே, முத்தமிட்டு முத்தமிட்டு மெல்ல மோகக்கடலில் ஆழ்த்தியவன், முத்தத்தை சாட்சியாக வைத்தே வெட்கத்திற்கு விடுதலைப் பத்திரம் எழுத வைத்தான். இருகண்கள் போதாதென நகக்கண்கள் பத்தும் பார்வை கொண்டு ரகசிய புதையலை தேடத் தொடங்க, அணங்கவள் அங்கங்கள் யாவும் அணிதிரண்டு, மன்மதன் படைக்கலண்களாக, நாணம் எனும் கேடயம் தாங்கி அவனை எதிர்த்தாக்குதல் நடத்த, முத்தமெனும் ஒற்றை ஆயுதம் கொண்டே அத்தனையும் வீழ்த்தினான். வீழ்த்தியவன் இறுதியில் வீழ்ந்தும் போனான்.
அனலாய் தகித்து, புனலாய் குளிர்ந்து, காற்றாய் சுழன்று, விண்ணாய் பொழிந்தவனை, நிலமாய் தாங்கிக் கொண்டாள்.
ஆண்மையில் இத்தனை மென்மையா என பெண்மையும், பெண்மையில் இத்தனை திண்மையா என ஆண்மையும் உணர்ந்த தருணமிது.
“மாமா…” என்றவளின் செல்லச் சிணுங்கல்களை, “இளா…” எனும் சிருங்காரச் சிணுங்கல்களாக மாற்றி, “டேய்… இளா…” என பெண்ணவள் உச்சஸ்துதியில் அரற்றும் நேரம் கெண்டைச் சேவலும் சேர்ந்து கூவியது விடிந்துவிட்டதென.
என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு
பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு
*****
“என்னக்கா! இன்னும் எந்திரிச்சு வரல. எழுப்பலாமா?” என்றுமில்லா திருநாளாக இன்று மகளும், மருமகனும் சீக்கிரம் எழுந்து வராதது கணபதிக்கு பயத்தை கொடுத்தது. அம்மையப்பன் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள,
“ஏன்டா! தூங்கட்டும் விர்றா!” என்றார் தாமரை பட்டும் படாமல்.
“இல்லக்கா, என்னைக்குமே இவ்வளவு லேட்டானதில்ல. அவனுக்கு முன்னாடியே குட்டிம்மா எந்திரிச்சு வந்துரும். அவனுக்கு உடம்பு ஏதும் முடியலியா? வெளிய தெரியாம அடியேதும் பட்டிருக்கானு தெரியலியே. நம்ம பயந்துருவோம்னு நம்மகிட்ட இந்தப்பய சொல்லாம விட்டுருப்பான். எந்திரிக்கவும் ஆஸ்பத்திரி கூட்டிப் போகணும்க்கா.” பதட்டத்தோடு அறை வாசலையே பார்க்க,
“அவங்க சாவகாசமா எந்திரிச்சு வரட்டும். நீ சாப்பிட வாடா.” தம்பியை அழைத்தவர், மகனின் கண்ஜாடைகளை இரவே சாடைமாடையாக கண்டிருந்தார். பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளை முழிக்கும் முழி எதற்கென.
வேந்தன் மட்டும் எழுந்து குளித்து வெளியே வந்தான். சாமியறை சென்று வழக்கம் போல் திருநீறு பூசி வந்தவனை, அங்கேயே நிறுத்தி மேலே போட்டிருந்த துண்டை எடுத்து ஆராயத் தொடங்கிவிட்டார் கணபதி.
“அக்கா! நான் சொல்லல? நிறைய கீறல் வாங்கியிருக்கான். வேறெங்கெல்லாம் அடிபட்டிருக்கோ தெரியல. ஆஸ்பத்திரி போகணும்.”
கணபதி பதற, அம்மையப்பன் பேப்பரை முகத்திற்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொள்ள, வேலையிருப்பது போல் அடுப்படிக்குள் சென்றுவிட்டார் தாமரை.
“ஐயோ மாமா! துண்டக்கொடுங்க. எளந்தாரிப்பயல இப்படியா பாப்பீரு?” அவசரமாக துண்டை பிடுங்காத குறையாக வாங்கியவன் தோளோடு போர்த்திக் கொண்டு வேகமாக மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்.
“என்னமோ இன்னைக்குதான் இவன புதுசா பாத்தமாதிரி ஓடுறான்” அலுத்துக் கொண்டே சாப்பிட வந்தமர்ந்தார்.
“ஐயோ! அப்பா, அம்மா முன்னாடி என் மானமே போச்சு. மரியாதை போச்சு. எல்லாம் உன்னாலதான்.”
அரச சபையில் அவமானப்பட்டு திரும்பிய தருமி ரேஞ்சுக்கு புலம்பியவன், தோளில் கிடந்த துண்டை சுருட்டி தூங்குபவள் மீது விட்டடித்தான். இருபுறமும் தலையைத் தாங்கி கட்டிலில் அமர்ந்துவிட்டான். எப்பவும் போல் குளித்துவிட்டு துண்டை போர்த்திக்கொண்டு வெளியே சென்றதை நினைத்து தனக்குள்ளே நொந்தும் கொண்டான்.
“காலங்காத்தால ஏன் கத்துறீங்க?” மீண்டும் போர்வையை தலையோடு இழுத்துப் போர்த்தி திரும்பிப் படுக்க,
“மணி பத்துடி” என அதட்ட, கேட்கக் கூடாததை கேட்டவள் போல் அலறியடித்து திரும்பினாள். எழும் நிலையில் இல்லை.
“எல்லாம் உங்களால தான். தூங்கவிட்டாதானே?”
“யாரு நானு?”
“அப்பறம் நானா?” என வாயாடிக்கொண்டே கட்டிலில் சேலையைத் தேட, அது எந்த மூலையில் கிடக்குதோ.
“ரெண்டு கப் ஜிகர்தண்டா தூத் குடிச்சதுக்கப்பறம், இனிமே நான்தானே கேக்கணும்னு அடுத்தடுத்து ஜிகர்தண்டா தூத் கேட்ட வடிவேல் ரேஞ்சுக்கு பண்ணுனது நானா?” என்றவனை அருகில் கிடந்த தலையணை கொண்டு படுத்தவாக்கிலேயே மொத்தி எடுத்துவிட்டாள்.
கையை இறுக்கிப் பிடித்தவன் கோழி அமுக்குவது போல் அமுக்கிப்பிடித்து மேலே இழுத்துப் போட்டுக் கொண்டான். களைந்த ஓவியமாய் இருந்தவளைப் பார்த்து கண்சிமிட்ட, வெட்கம் தாளாமல் சிரிப்போடு மீண்டும் மார்பின் மீதே தஞ்சமடைந்தவளை, மலர்ந்த சிரிப்போடு தனக்குள் இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
தொடக்கத்தில் பயந்து, தயங்கி, தத்தளித்தவளை மெல்ல வசியப்படுத்தி, தன்வசப்படுத்த மண்ணோடு கலந்த மழை நீராய் ஒன்றியவள், இத்தனை நாட்களாக அவனை அலைக்கழித்ததற்குப் ஈடுகட்டுவதாக, தன்னை முழுதும் ஒப்புக்கொடுத்தவள், அவனை மன்மத ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஏற்றிவைத்தாள்.
“ஃபிராடு, பண்ணதெல்லாம் நீங்க பண்ணிட்டு, என்ன சொல்றீங்களா?”
“உன்னைய யாருடி இப்பனு பாத்து புதுக்கொலுசு எடுத்துப் போடச் சொன்னது. இங்க பாரு.” முதுகை திருப்பிக் காட்ட, பார்த்தவளுக்கு முகம் சிவந்துவிட்டது.
முன்தினம் நகைகளை கழட்டி வைத்தவள், அங்கிருந்த புதுக்கொலுசை பார்த்தாள். முதன்முதலாத தங்கைக்கு மாப்பிள்ளை விசாரிக்க நகைக்கடை வந்த பொழுது வேந்தன் வாங்கிவந்தது. தன் காலில் கிடந்த மெல்லிய கொலுசை கழற்றிவிட்டு அவனுக்கு பிடிக்குமென அப்பொழுதே மாற்றிக் கொண்டாள். அவள் ஓடிவந்து தன் மீது விழுந்த பொழுதே, புடவையை மாற்றாமல் தனக்காக காத்திருந்தவளிடம் தெரிந்த கொலுசு சப்தத்தை வைத்தே அவளிடம் மாற்றத்தை கண்டுகொண்டான்.
“உங்களுக்கு பிடிக்குமேன்னு போட்டேன். இப்படி ஆகும்னு நெனைக்கல”என்றாள் சங்கோஜமாக.
“மாமா வேற துண்ட எடுத்துப் பாத்து எம்மானமே போச்சுடி.”
“ஆமா, அப்படியே தெரிஞ்சுட்டாலும். இனிமே துண்டுமட்டும் போட்டு வெளியே போகமாட்டீங்கள்ல. நானே இவ்வளவு நேரமாச்சு, எப்படிடா வெளியே போறதுன்னு இருக்கே. ஒழுங்கா அடுப்படி போய் மஞ்சள்தூள் எடுத்துட்டு வாங்க.” அதிகாரமாய்ச் சொல்ல,
“போடி! நீயே போய் எடுத்துக்க. அம்மா இருக்காங்க. நான் போகல” என சிலுப்பிக் கொண்டான்.
“ப்ளீஸ் மாமா! குளிக்காம எப்படி அவங்க முன்னாடி போய் நிக்கறது. உங்களுக்காவது உத்துப் பாத்தாதான் தெரியும். என் செல்லம் இல்ல.” மீசை இழுத்துப்பிடித்து கொஞ்ச,
“சரி, சரி உடனே பாவமா மூஞ்சிய வைக்காதே. இந்த கொஞ்சல்லாம் நைட்டு எங்க போச்சுன்னு தெரியல. ஒவ்வொன்னா கேட்டு கேட்டு வாங்கவேண்டியதாப்போச்சு. இருந்தாலும் லோயர் பெர்த்ல இருந்தவ, அப்பர் பெர்த் வந்ததும் வண்டி டாப் கியர்ல கெளம்…” என்றவனை முடிக்கவிடாமல், பதறி வாயைப் பொத்தினாள். கண்களில் கள்ளத்தனம் மிஞ்ச பார்த்தவனை,
“வெவஸ்த்தைகெட்ட மனுஷா! எந்திரிச்சு வெளிய போங்க மொதல்ல” மீண்டும் சிலபல மொத்துகளை வாங்கிக்கொண்டே இம்முறை சட்டையை எடுத்துப் போட்டு வெளியே வந்தான்.
அடுப்படி வந்து தாமரைக்கு தெரியாமல் மஞ்சள் டப்பாவை எடுத்துக் கொண்டு நகர்ந்தவன் கையில் எண்ணெய் கிண்ணத்தை கொடுத்து, சூடு அமர உச்சியில் வைத்து குளித்துவரச் சொன்னார். அசடுவளியாமல் வாங்கிவர சிரமப்பட்டு போனான்.
குளித்து இருவரும் வெளியே வர, மருமகளை விளக்கேற்றி வரச்சொன்னார். அவர்களுக்கு சூடாக இட்லி ஊற்றி வைத்துவிட்டு, ஆட்டுக்கால் சூப்பை மீண்டும் சூடுசெய்து எடுத்துவந்து கொடுத்தார்.
கொல்லைப்புறமிருந்து வந்த கணபதியின் ஒரு கையில் மொரட்டு சேவலும், மறுகையில் வெடக்கோழியும். அக்காவிடம் எது வேண்டுமென கேட்க வந்தார்.
“கோழி வேண்டாம்டா தம்பி. சும்மாவே சூடு. வெள்ளாட்டங்கறி நெஞ்செலும்புக் கறியா எடுத்துட்டு வா! தலைக்கறி இருந்தாலும் வாங்கிக்கோ!”
“ஏம்மா! குடல் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு. அதமட்டும் விட்டுட்டீங்க.” வேந்தன் எடுத்துக் கொடுக்க, அப்பொழுதுதான் மகளையும், மருமகனையும் கவனித்தார் கணபதி.
இத்தனை நாட்களிலில்லாத தனி சோபை இருவர் முகத்திலும். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், பசியோடு ஆர்வமாக மகள் உண்டு கொண்டிருந்தாள். அத்தனை பொலிவும், மலர்ச்சியும் மகள் முகத்தில் இன்றுதான் பார்க்கிறார்.
தாமரையின் நலுவல் பேச்சுக்களுக்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது. ஒரே நாளில் அக்காவுக்கு புரிந்தது தனக்கு ஏன் புரியவில்லை என யோசித்தார். தண்டுவனாட்டம் சுத்திட்டு திரிஞ்சவனுக்கு இதெல்லாம் எங்க புரியும்’ என மனம் நொடித்தாலும் அத்தனை ஆனந்தம் உள்ளுக்குள் தன் பிள்ளைகளின் வாழ்வு தொடங்கியதில்.
“எதுக்குக்கா தனித்தனியா வாங்கிக்கிட்டு. மொத்தமா ஒரு ஆட்டையே உரிச்சு வாங்கிட்டு வந்துர்றேன்.” ராஜ்கிரண் மாதிரி வேட்டியை மடித்துக் கட்டினார். இப்பொழுது அவருக்கிருக்கும் சந்தோஷத்தில் செய்தாலும் செய்வார்.
“டேய்! அதெல்லாம் எல்லாரும் ஒன்னுகூடுற அன்னைக்கி பாத்துக்கலாம்.” தம்பியின் ஆர்வத்திற்கு அணைபோட்டார். இப்போதைக்கு அக்கா சொன்னவற்றை வாங்க உடனே கடைக்கு கிளம்பிவிட்டார்.
சாப்பிட்டு வந்தவன், அம்மையப்பனிடம், விபத்து பற்றியும், இன்சூரன்ஸ் பற்றியும் பேச ஆரம்பிக்க, செழியனும் வந்து சேர்ந்தான்.
விஷயமறிந்து மாரியம்மாள் வேந்தனைப் பார்க்க மகனோடு வந்துவிட்டார். இவர்கள் வந்த சற்று நேரத்திற்கெல்லாம், அம்மையப்பன் தம்பிகள் குடும்பமும் கணபதி வீட்டிற்கு வந்துவிட்டனர் வேந்தனை விசாரிக்க.
கடைக்கு சென்றவர் இரண்டு கைகளிலும் பெரிய பைகளை சுமந்துவந்தார். வெகு வருடங்கள் கழித்து தன் வீடு சொந்த பந்தங்களால் நிறைந்திருப்பதை பார்த்தவருக்கு சந்தோஷம் தாளவில்லை. எல்லாம் மகள் வந்த நேரம் என மெச்சிக்கொண்டார். மருமகன் உடனிருந்தான் தான். ஆனால் மகள் என்ற உறவுதானே முடிபோட்டு அந்த உறவையும் இறுக்கிப் பிணைத்து வைத்தது. ஒரு உறவுதானே மற்றொன்றை அழைத்துவரும். மகள் வர மருமகன். அவனைக்கொண்டு அவன்சார்ந்த உறவுகள். இப்படி தொட்டுத் தொடர்வதுதானே சொந்தமும் பந்தமும். என்னதான் மனச்சடவு எனினும் அக்கா மகனை விசாரிக்க வித்யாவதியும் வந்துவிட்டார்.
தம்பியின் இரண்டு கைகளிலிருந்த பெரிய பைகளை பார்த்தவர், “என்னடா தம்பி இம்புட்டு!” தாமரை ஆச்சர்யமாக,
“நான் போகும்போதே எதுத்தாப்ல வந்த காரெல்லாம் பாத்துட்டு தான்க்கா போனேன். சின்னதா ஒரு ஆட்ட புடுச்சு உரிக்கச் சொல்லிட்டேன். நெஞ்சுக்கறி மட்டும் துண்டா இருக்கு. அதமட்டும் எடுத்து பிள்ளைகளுக்கு நீ பாத்துக்க. மிச்சமெல்லாம் வெளியே வெறகடுப்புக்கூட்டி நான் பாத்துக்கிறேன். அம்புட்டும் உன்னால முடியாது.”
“அதுக்குனு இத்தனையாடா?”
“மிச்சமிருந்தா போகும்போது எல்லாருக்கும் தூக்குவாளில போட்டு கொடுத்துவிடுக்கா. இந்தா… சின்னது வந்திருக்கு. பையலுகளுக்கு போகும்போது எடுத்துட்டு போகும்ல” என்றவர், மேல்துண்டை எடுத்து தலையில் உருமா கட்டிக்கொண்டு, மளமளவென வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட, வந்தவர்களும் ஆளும்போருமாக ஆளுக்கொரு வேலையைப் பார்க்க,
மதியவிருந்து சொந்த பந்தங்களோடு களைகட்டியது வெகுநாட்கள் கழித்து கணபதி வீட்டில்.
