“மாமா…” என எல்லைச்சாமி போல் அசையாமல் புத்தி பேதலித்து நின்றவரை உலுக்க, மடங்கி அமர்ந்தவர், சட்டென்று உடைந்துவிட்டார்.
“எம்பிள்ளைய ரொம்ப தவிக்க விட்டுட்டேன்டா. நாம்பட்ட அசிங்கம் மட்டுந்தான் தெரிஞ்சதே ஒழிய, பெத்த பிள்ளைய மறந்துட்டேனேடா. பிஞ்சுலயே எத்தன கஷ்ட்டம் எம்பிள்ளைக்கு” என வார்த்தைக்கு வார்த்தை எம்பிள்ளை என நெஞ்சில் கைவைத்து வெடித்து அழுதார்.
ஆறடியில் ஆஜானுபாகுவான ஆண்மகன் இந்த வயதில் அழுவதை பொறுக்க மாட்டாமல் வேந்தனுக்கும் கண்கள் ஊற்றெடுக்க, மாமனை நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, சிறுபிள்ளைபோல் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுபவரை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை. அவருக்கிணையாக அவனும் அல்லவா அவளை தவிக்க விட்டுருக்கிறான்.
அவளைப் பார்க்கும் வரை அவள் நினைப்பு இல்லைதான். ஆனால் அவளைப் பார்த்த பிறகு மறக்கவில்லையே. இதை எப்படி அவளுக்கு புரியவைப்பது. தனக்காக ஒருத்தி, தன் நினைவிலேயே ஒருத்தி தவம்கிடக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் இன்று இல்லை. ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான இரண்டு ஆண்கள் அப்பாவும், கணவனும். இருவருமே இன்று அவள் முன் குற்றவாளிகள்.
“மாமா” என மீண்டும் உலுக்க,
“எம்புள்ள அப்பானு சொல்லாதாடா? அப்பாவா என்னத்த செஞ்சேன். நல்ல புருஷனாவும் இல்ல. நல்ல தகப்பனாவும் இல்லடா. நானெல்லாம் சோத்துக்கு கேடு. பூமிக்கு பாரம்டா”
புலம்பியவரை தேற்றும் வழியறியாமல், தேங்கி நின்றான். அவள் பட்ட கஷ்ட்டங்களை காதால் கேட்டதற்கே இவ்வளவு உடைந்து போனால், அதை அனுபவித்தவள் நிலமை.
நடந்தவை எதையும் இனி மாற்ற முடியாது. இனி செய்ய வேண்டியதெல்லாம் அவள் மனக்காயத்திற்கு மருந்திடும் வேலை மட்டும்தான். பழைய நினைவுகளை மீண்டும் தூசிதட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவுக்கு வந்தான். ஆனால் காயத்தின் ஆழம் அதிகமாகி ரணமாகி புரையோடிருப்பது தெரியவில்லை அவனுக்கு. உங்களுக்கு என்னோட அவஸ்த்தை சொன்னா புரியாது என சலிப்போடும், வலியோடும் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தது வேந்தனின் மனது.
“அவனே தூக்குல தொங்கிட்டான்டா. இல்லைனா எங்கையாலதான் செத்திருப்பான். எங்கூட்ட கலச்சது அவன்தானடா?”
சட்டென்று அழுகை நின்று, கோபத்தில் அவனை கட்டியிருக்க, கணநேரத்தில் கண்கள் சிவப்பேறி வேந்தனுக்கும் உடல் இறுகி மீண்டது. எத்தனை ஆண்டுகள் போனாலும் மறக்காத நினைவது.
கல்யாணி வீட்டைவிட்டு வெளியேறிவிட, பாதயாத்திரை சென்றிருந்த கணபதி வீடு திரும்புவதற்குள், மாரியம்மாள் குடும்பத்தை வரவைத்த கனகம், கல்யாணி ஓடிப்போனதை மட்டுமே சபையேற்றி அவர்களை அசிங்கப்படுத்தி, இது யாருக்குப் பொறந்ததோ என மங்கையையும் அவர்களுடனே அனுப்பிவிட்டார்.
கையோடு வேந்தனையும் தேனிக்கு அனுப்பிவைத்தார். சிறுவர்கள் இருவரும்தானே சென்றாயன் செய்த அசிங்கத்திற்கு சாட்சி. எனவே ஆளுக்கொரு திசையாகப் பிரித்துவிட்டார். கணபதியிடம் சிறு பிள்ளைகள் உளறிவிட்டால் என்ன செய்வதென்று கனகத்திற்கு பயம். மகனும் ஜெயிலுக்குப் போவான். சின்ன மகளும் வாழ்க்கை இழந்து நிற்க வேண்டும்.
கணபதி வீடு திரும்ப மனைவி ஓடிப் போனதே ஊர் முழுவதும் பேசப்பட, ஊருக்குள் அதுவரை சண்டியராக நெஞ்சை நிமிர்த்தி நடந்தவர், தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் உள்ளுக்குள் கூனி குறுகிப்போனார். மனைவி ஓடிப் போனால் கணவன் எத்தனை கீழ்த்தரமான பேச்சுக்களை கேட்க நேரிடுமோ அத்தனையும் எகத்தாளச்சிரிப்போடு முதுகுக்குப் பின் கேட்க நேரிட, எங்கும் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டோடு ஒடுங்கிப் போனார். குடிப்பழக்கமும் அவரை தடுத்தாட்கொள்ள, எந்த நல்லது கெட்டதுக்கும் எங்கும் வெளியேறவில்லை.
வருடங்கள் கடந்த நிலையில், சென்றாயன் தனது வக்கிர புத்தியை, மகன்களோடு விளையாட வந்த பக்கத்து வீட்டு சிறுமியிடம் காண்பிக்க, வழக்கு காவல்துறை வரை சென்றது.
அப்பொழுதுதான் தன் வீட்டிலும், செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்யாசம் தெரியாமல், அந்த நாய் வாய் வைக்க முயற்சி செய்தது வேந்தன் மூலம் கணபதிக்கு தெரியவந்தது. வேந்தனுக்கும் பத்து வயதில் நடந்ததன் முகாந்திரம் புரிய ஆரம்பித்த வயது. காலம் கடந்த ஞானம். தன் கூட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை இனம்காணாதது அவரது தவறுதானே. கணவனாகவும் சரிவர நடந்து கொள்ளவில்லை. தகப்பனாகவும் மகளுக்கு கடமையைச் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு அவரை கரையானாய் அரித்தது.
ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து கீழே அழைத்து வர, இன்னும் இவனது அரையில் விளக்கு எரிந்தது. இன்னும் அவள் தூங்கவில்லை எனப்புரிந்தது.
அவள் படுக்காததற்கு புது இடம் என்ற, அவளது பயம் மட்டுமே காரணம் இல்லை. இது வேந்தன் படுக்கை என்பதும் முக்கிய காரணம். அறையெங்கும் அவனது உடைகளும், உடமைகளும் வியாபித்திருக்க, அறை முழுதும் அவனே நிறைந்திருப்பது போல் பிரமை அவளுக்கு.
இதில் கட்டிலுக்கு நேரெதிரே, வலக்கையை இடுப்பில் ஊன்றி, இடக்கையால் மீசையை முறுக்கியவாறு, இடுப்புவரை எடுக்கப்பட்டு பெரிதாக லேமினேட் செய்த புகைப்படம் வேறு சுவற்றில் மாட்டப்பட்டிருக்க அவளையே பார்ப்பது போன்ற தோற்றப்பிழை வேறு அவளுக்கு. வெறுப்பாக பேசிவந்த பின்னரும், படுக்கையில் படுத்தவளுக்கு, அவனது படுக்கை என்ற நினைப்பு வர, அவனும் உடனிருப்பது போல் தோன்ற, ஏதடா இம்சையிது என தலையணையை எடுத்து கீழே போட்டு குப்புற படுத்துவிட்டாள். தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. வழக்கம்போல் கைபேசி எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். மனம் மட்டும் தம்போக்கில் சென்று கொண்டிருந்தது.
அப்பத்தா இறப்பு வீட்டில், பந்தலின் கீழ் கிடந்த சேர்களில் அம்மாச்சியும், பேத்தியும் ஒதுங்கி அமர்ந்திருந்தனர். வந்தவர்கள் பார்வை முழுவதும் இவள் மீதுதான். முந்தானை கொண்டு வாய்மூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒரு சிலர் நேரடியாகவே இவளிடம் வந்து நலம் விசாரித்தனர். கண்டிப்பாக நல்லவிதமாக இல்லை என்பது மட்டும் புரிந்தது.
கணபதி மகளா என விசாரிக்காமல், கல்யாணி மகளா எனக் கேட்டதிலேயே, ஓடிப் போனவள் மகளா என்ற உள்குத்து தொக்கி நின்றது அவர்களது நலம் விசாரிப்பில். மூடிய காயத்தை கீறிப்பார்ப்பதில் தான் நம் மக்களுக்கு என்ன ஒரு ஆனந்தம். அந்த வயதிலேயே எனக்கு இது பழகிப் போயிற்று என தெனாவெட்டாகவே அமர்ந்திருந்தவள், பார்வை முழுவதும் வேந்தன் மீதுதான். பலூன்காரன் பின் செல்லும் சிறுபிள்ளையின் பார்வை போல அவன் செல்லும் திசையெங்கும் மங்கையின் கண்கள் அவனையே பின்தொடர்ந்தது.
நெடுநெடுவென, ஒல்லியாக, இப்பொழுது இருக்கும் நிறத்தை விட இன்னும் சற்று தூக்கலாக இருந்தான். முந்தின நாள்தான் சபரிமலைக்கு மாமனோடு சென்றுவந்திருந்தான். விரதம் இருந்ததினால், வெட்டப்படாத தலைமுடி காடுபோல் வளர்ந்திருக்க, முகம் முழுவதும் சரியாக முளைக்காத தாடியும், அரும்பு மீசையுமாக, கைலி, சட்டையில்தான் வலம் வந்தான்.
முழுப்பரிமாணம் பெறாத எளந்தாரித் தோற்றமும், மலைக்குச் சென்று வந்த அலைச்சலும், வந்த மறுநாளே துக்கம் என அங்குமிங்கும் அலைந்ததில் உடல் களைத்து, கருத்து, அவனை சற்று காட்டான் போலத்தான் காட்டியது.
கணபதிக்கு உடன் பிறப்பு என்று ஆண்கள் எவரும் இல்லை. அம்மையப்பன்தான் காரியத்தை எடுத்து செய்தார். இவன்தான் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.
ஒப்பாரிச்சத்தம், கொட்டுச்சத்தம், ரேடியோ சத்தத்தையும் மீறி அடிக்கடி அவள் காதில் விழுந்தது, “வேந்தா” எனும் அழைப்புதான்.
வந்தவர்களுக்கு காஃபி விநியோகிக்கப்பட, வேந்தனே இவர்களுக்கும் காஃபி கொண்டு வந்து கொடுக்க, மாரியம்மாள் தீட்டு வீடு என எடுக்கவில்லை. அப்பொழுதும் அவன் முகத்தைத்தான் அன்னார்ந்து பார்த்தாள். அவன் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அடுத்தவர்களுக்கு கொண்டு சென்றான்.
சட்டென முகம் கன்றிப்போக, கண்கள் கலங்க, அப்படியே வாங்கிய காஃபியை கோபமாக கீழே போட்டுவிட்டு எழுந்து கொண்டாள். வந்த கடமைக்கு எண்ணெய் வைத்துவிட்டு கிளம்ப, சாவு எடுக்காம எப்படி போறது என மாரியம்மாள் தயங்க, இவள் விறுவிறுவென நடந்து காருக்கு வந்துவிட, வேறு வழியில்லாமல் மாரியம்மாளும் உடன் கிளம்பிவிட்டார்.
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றிவைத்து என் தலைவன்
விட்டு விட்டு போனானாடி…
பாடல் மைக் செட்டில் ஒலித்துக் கொண்டிருந்தது இவளுக்கெனவே. அழுதபடியே வீடு வந்து சேர்ந்தாள்.
மனதிலிருந்ததை கொட்டிவிட்டால் பாரம் குறைய வேண்டாமா? ஏனோ மீண்டும் பாரம் அழுத்தியது.
பழையன கிளறப்பட்டு நெஞ்சை அழுத்த, மெலிதாக நெஞ்சைக்கரித்து வயிறு வலிக்க ஆரம்பித்தது. இங்கு வந்ததிலிருந்து உணவில் காரம் அதிகம் என நினைத்துக் கொண்டாள். அரைகுறையாகத் தூங்கி, அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள்.
முகம் கழுவி வெளியே வர, தாமரை காஃபி போட்டுக் கொண்டிருந்தார். அம்மையப்பன் வாக்கிங் சென்றிருந்தார். சிறியவர்கள் யாரும் இன்னும் எழுந்து வரவில்லை.
“வா மங்கா. காஃபி போடவா?”
“வேண்டாத்தை.”
“அப்ப, டீ போடவா?
“எனக்கு டீ, காஃபி சேராது அத்தை. அதனால குடிக்கறதில்ல.”
“அறுபது வயசு கெழவியாட்டம் சொல்ற. எனக்கு காஃபி இல்லைனா பொழுதே விடியாது. வேந்தன் அதுக்கு மேல. பஸ் ஓட்டப் போனதுலருந்து நெனச்ச நேரத்துல டீ கேப்பான்” என சிரித்தார்.
“என்னம்மா, காலையிலேயே மூத்தமகன் பெருமைய மதினிகிட்ட பாடுறீங்க போல?” செழியனும் எழுந்துவர,
“உனக்கும் ஒரு பொண்ணு வரட்டும்டா. உத்தமன் வர்றான். செம்பெடுத்து உள்ள வைங்கம்மானு உன் பெருமையையும் பேசறேன்டே.” என நக்கல் செய்ய, மங்கா சிரித்துவிட்டாள்.
அப்பொழுதுதான் எழுந்து வந்த வேந்தனும் அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தான். சரியாக தூங்கவில்லை என்பதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.
“ம்மா, இதுக்கு மேல என்ன அசிங்கப்படுத்த முடியாது. மதினி! சீக்கிரம் நீங்க தலையாட்டுனீங்கனா, என் தலை வழுக்கையாறதுக்குள்ள நானும் பந்தக்கால் ஊனிருவேன்.”
“காலையிலேயே என்னடா சலம்பல் ஓவரா இருக்கு?” வேந்தனின் கேள்வி செழியனிடமும், பார்வை மங்கையிடமும் இருக்க,
“அண்ணே! நான் இங்க இருக்கேன். வயசுப் பையன் வீட்ல இருக்கான்ற நெனப்பு யாருக்கும் இல்ல. கண்ணாலேயே பேச வேண்டியது? நானே எனக்கொரு அத்தை மகளுக்கு வழியில்லையேனு வருத்தத்துல இருக்கே.”
அம்மையப்பன் வழியில் இருவரும் சித்தப்பாக்கள் என்பதால் அத்தைக்கு வழியில்லையே என அலுத்துக் கொண்டான் செழியன்.
“இவன் ஒருத்தன். இதுலயே நிக்கிறான். மங்கா படிப்பு முடிக்க வேணாமாடா?” மகன்கள் இருவரது கையிலும் காஃபி டம்ளரை கொடுத்துவிட்டு தாமரை கடிந்து கொள்ள,
“அம்மா! அவனே வருத்தத்துல இருக்கான். எதுக்கும் கறி கம்மியா எடுங்க. அவன் சரியா சாப்பிடமாட்டான்.”
“அடப்பாவி அண்ணா! வாயில வேணா அடி. வயித்துல அடிக்காதே!”
“உன் அவசரத்துக்கு பொண்ணு கிடைக்குமாடா?” தாமரை கேட்க,
“எனக்குனு யாரும் பஞ்சாயத்து கூட்டாமையா போவாங்க? அண்ணனுக்கு ஒரு மாமன் பொண்ணுனா, எனக்கு ஒரு அத்தை பொண்ணுக்கு வழியில்லாமலா போகும்?”
கல்யாணத்தில் நடந்த பஞ்சாயத்தால் தான் இவன் பெண் கேட்டான் என்பதை சுட்டிக்காட்ட, இவ மறந்தாலும், இவன் விடமாட்டான் போலயே என நொந்து கொண்டான். அவன் கவலை அவனுக்கு.
“மொதல்ல காஃபிய குடிச்சுட்டு கடைக்குப் போயிட்டு வாடா. மாப்பிள்ளை எந்திரிச்சு வந்துருவாரு. அதுக்குள்ள கொழம்பு வைக்கணும்.” கட்டைப்பையும், காசும் கொண்டு வந்து கையில் திணித்தார் தாமரை.
“எப்பபாரு சின்னப்பையனாட்டம் என்னையே கடைக்கு அனுப்புங்க. அப்பறம் யாரு என்ன மதிச்சு பொண்ணு கொடுப்பா?”
“மொதல்ல கெளம்புடா. மீதிக்காசு ஒழுங்கா வரணும். யானைக்கு அல்வா வாங்குனே. குதிரைக்கு கொள்ளு வாங்குனேட்டு வரக்கூடாது. கணக்கு கரெக்ட்டா வரணும்.
“சின்னப்பிள்ளைல மட்டும் மீதிக்காசுக்கு சாக்லேட் வாங்கிக்க சொல்வீங்கள்ல. அது மாதிரி நெனச்சுக்குங்க.”
“டேய்! அது ஒரு ரூவா, ரெண்டு ரூவாடா.”
“அதெல்லாம் செல்லாது செல்லாது. மீதிக் காசு எனக்குத்தான்.” என அம்மாவிடம் வம்பு பேச,
வேந்தன் மங்கையைப் பார்க்க, அவளும் இவனைத்தான் பார்த்தாள். சிறுவயதில் கடைக்கு கிளம்பினால் தன் முதுகில் சவாரி செய்து கொண்டு, வாங்கிவரச் சொன்ன பொருளை கடைவரை சொல்லிக் கொண்டே வருபவள், மீதிக் காசு அத்தனைக்கும் சாக்லேட் வாங்கி கொடுத்தால்தான் இடத்தைவிட்டே நகரவிடுவாள். அவளுக்கும் அதே எண்ணம் தான் போல.
“அண்ணேஏஏ!” என மூன்றாம் முறையாக கத்தி அழைக்க,
“என்னடா?” என சலிப்பாய் பார்க்க, மங்கை உள்ளே சென்றுவிட்டாள்.
“எந்திரிண்ணே! பைய எடுக்கணும்.” அப்பொழுதுதான் சோஃபாவில் வைத்துவிட்டு காசை எண்ண, வேந்தன் பை மீது அமர்ந்திருப்பது தெரிய, எடுத்துக் கொடுத்தான்.
“வயசுப்பையன் முன்னாடி இதெல்லாம் நல்லா இல்ல.” என இழுக்க,
“எதுடா?”
“கண்ணால பேசறது.”
“மொதல்ல சொன்னது எதையும் மறக்காம வாங்கிட்டு வா எரும. நாலு சாமான் வாங்க நாலுதடவ போவ. அப்படியே இலையும் வாங்கிட்டு வாடா” என்றான் வேந்தன்.
அவன் யாரை மனதில் வைத்து சொன்னான் என்பது மங்கைக்கு மட்டும்தானே தெரியும். இன்னும் இங்கு அவள் பழகவில்லை. எல்லோரும் புழங்கிய தட்டு அவளுக்கு சாப்பிட கஷ்ட்டம் எனப் புரிய, மொத்தமாக அனைவருக்கும் இலை வாங்கிவரச் சொன்னான்.
செழியன் வருவதற்குள் தாமரையும், மங்கையும் மசாலா அரைத்து வைக்க, காலை சாப்பாட்டிற்கு சுடச்சுட இட்லி, இடியாப்பம், மட்டன் குழம்பும், ஆட்டுக்கால் குழம்பும் தயாராகியது. மதியத்திற்கு தனி லிஸ்ட். வாக்கிங் சென்றவர் மீனோடுதான் வந்தார். ஒவ்வொருத்தராக எழுந்து குளித்து வர, திவ்யாவும், மதியழகனுமே ஒன்றாகக் குளித்து வெளியே வந்தனர்.
அனைவரும் ஒன்றாக அமர, தாமரையும், மங்கையும் பரிமாற, தாமரை அவளையும் சேர்ந்து அமரச் சொன்னார்.
“நைட்டு லேட்டா தூங்கினதால பசிக்கலத்த. கொஞ்சம் நேரம் போகட்டும்.”
“என்ன நீ. இந்த வயசுல பசிக்கலங்கற. மொதல்ல உக்காரு!” என அதட்டி உட்கார வைத்தார். அவளால் இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. முதல் இட்லிக்கே வயிறு வலிக்க ஆரம்பித்துவிட, எல்லார் முன்பும் வைத்துவிட்டு எந்திரிக்க முடியவில்லை. மெதுவாக மென்று, தண்ணீரைக் குடித்து உள்ளிறக்கினாள். இதில் மதியமும் அசைவமே. என்ன செய்வதென்று புரியவில்லை. மகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் கணபதி. அவளுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் முகம் காட்டிக் கொடுக்க, வேந்தனைப் பார்த்தார். அவன் கண்களை மூடி சமாதானப் படுத்தினான்.
“அக்கா! நாங்க கெளம்புறோம்” என்றார் காலை சாப்பாட்டை முடித்தவுடன் .
“என்னடா! இப்பவே கெளம்புற. மதியம் சாப்பிட்டு போலாம்.”
“இல்லக்கா! அரசியும் காலேஜ் அசைன்மென்ட் ஏதோ இருக்குனு நேத்தே சொல்லுச்சு. திவ்யா வந்ததாலதான் ராத்திரி தங்கினோம். ட்ரெஸ் வேற எடுத்துட்டு வரலக்கா. இன்னொரு நாளைக்கு சாவகாசமா கூட்டி வர்றேன்.”
“திவ்யா ட்ரெஸ்ஸ குளிச்சுட்டுப் போடட்டும்டா. இதுல என்ன இருக்கு. அத்தை மக, மாமன் மகளுகளுக்குள்ள இதுகூட மாத்திக்கக் கூடாதா?”
தாமரை உபாயம் சொல்ல, கணபதி வேந்தனைப் பார்த்துவிட்டு, மகளைப் பார்க்க, மங்கை முகம் நிர்மல்யமாக இருந்தது. கண்டிப்பாக மகளால் போட முடியாது எனத் தெரியும். அடுத்தவர்கள் புழங்கியதை புழங்க மாட்டாள். இதை அவள் சொன்னால் குற்றமாகப்படும். இவரே முந்திக் கொண்டார்.
“அதெல்லாம் வேண்டாம்க்கா. ரெண்டு பேர் அளவும் வேற.”
“திவி, மாமா உன்ன குண்டுன்னு சொல்லாம சொல்றாரு.” செழியன் இருவருக்குள்ளும் சிண்டு முடிந்துவிட,
மதியழகன் நமட்டுச்சிரிப்பு சிரித்தான். “இலவம்பஞ்சு மெத்தைடி. எந்திரிக்கவே மனசு வரல” என்றுதானே அவனும் நித்தமும் மூச்சுமுட்ட கொஞ்சுகிறான். திவ்யா முறைத்துப் பார்த்தாள். இந்தச் சிரிப்பின் பின் விளைவு தெரியவில்லை பாவம் புதுமாப்பிள்ளைக்கு.
“டேய்! எங்களுக்குள்ள சிண்டு முடியற வேலைய வச்சுக்காத. சொல்றதுன்னா நானே நேரடியா சொல்லப் போறேன். நான் தூக்கி வளத்த பிள்ளைகிட்ட எனக்கென்ன பயம். என்ன குட்டிம்மா?” கணபதி அவளையே மத்தியஸ்த்தம் பண்ண அழைக்க,
“தூக்கி வளத்ததாலதான வெயிட் தெரியுது. திவ்யா இப்ப உனக்குப் போட்டியா புதுசா இன்னொரு குட்டிம்மா.” என செழியன் சிரிக்க, மீண்டும் அங்கே ஒரு கலாட்டா அரங்கேறியது.
‘போச்சுடா! நான் புதுசான்னு கேள்வி கேப்பாளே?’ என வேந்தனின் மைன்ட் வாய்ஸ் எச்சரிக்க, அவனும் அவளைப் பார்க்க, அவளது பார்வையும் அதையே கேட்டது.
“ம்மா! சாப்பாடு மதியம் நம்ம பஸ்ல கொடுத்து விடலாம். அதான் வேலையிருக்குன்னு சொல்றார்ல.” வேந்தன் தாமரையை சாமாதானப் படுத்தி அவளை இங்கிருந்து கிளப்பினான்.
“அக்கா, நான் சில முடிவுகள எடுத்திருக்கேன். வேந்தன்கிட்ட எல்லாம் பேசிட்டேன். நீயும் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்.” கிளப்பும் பொழுது கணபதி அக்காவிற்கு தாக்கல் சொல்ல,
“அப்படி என்னடா முடிவு?” என்றார்.
“எல்லாம் முடிச்சுட்டு சொல்றேன்க்கா. சின்னது ஒன்னு இருக்குல்ல. மொத அத சரிக்கட்டணும்” என்றவர், மகளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
இப்பொழுது இவரே காரை ஓட்ட, சற்று தூரம் சென்றதுமே நெஞ்சைக் கரித்து ஒமட்ட, வேகமாக காரை ஓரங்கட்டினார். சாப்பிட்ட கொஞ்சமும் வெளியேற, அவசரமாக தண்ணீர் வாங்கிவந்தார்.
“குட்டிம்மா, ஹாஸ்பிடல் போலாமா?” கலக்கமாகக் கேட்க,
“ம்கூம். காரம் எனக்கு ஒத்துக்காது. அல்சர் பிரச்சினை இருக்கு.” என சொல்ல, அவரது அரைகுறை சமையலிலும் காரம் தூக்கல் தான். ஆனால் இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சினை இல்லையே என யோசித்தவர் கார் நின்றது மருத்துவமனையில்தான்.
எந்த சிறு பிரச்சினை என்றாலும் இனியும் மகள் விஷயத்தில் மெத்தனம் காட்ட விரும்பவில்லை. மகளை மருத்துவரிடம் காண்பித்து மருந்து வாங்கிய பிறகே வீட்டிற்கு அழைத்து வந்தார். வேந்தனுக்கும் அழைத்து சொல்லிவிட்டார். அவனுக்கும் அவளைப் பற்றிய சிந்தனையே.
அவளுக்குப் பிடிக்காத சூழலோ, அல்லது அவளது மன அழுத்தமோ ஏதோ ஒன்று அவளுக்கு ஒவ்வாமையை உண்டுபண்ணுகிறது எனப்புரிந்தது. முதன் முதலில் பஸ்ஸில் நடந்த சம்பவம். அடுத்து விமல் நடந்து கொண்டது. இப்பொழுது தூர் வாரப்பெற்ற பழைய நினைவுகள்.
மங்கை சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒன்று இடறியது. அவளுக்கு ஏதோ மனதளவில் பிரச்சினை எனப் புரிந்தது. எந்தவிதத்தில் எனத் தெரியவில்லை.
இன்றுதான் சிறு தலைவலி என்றால் கூட காரணம் என்னவாக இருக்கும் என யோசிப்பதில்லை. தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால் கூட தலைவலிக்கும். அதிகமா ஃபோன் பாத்தோமா, சரியா சாப்பிடலையா, ஒழுங்கா தூங்கினோமா என முதலில் சுய அலசல் செய்வதில்லை. தலைவலி தீரவில்லையா மருத்துவரை அணுக வேண்டும்.
ஆனால் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கூகுள் ஆண்டவரைத்தானே உடனே சரணடைகிறோம். சிறு தலைவலிக்கு கூகுளைத்தான் தட்டினால், அது ப்ரைன் ட்யூமர் வரை நமக்கு மரண பயம் காட்டும். அவனும் அவள் நடந்துகொண்ட விதம் வைத்து கூகுளைத்தான் தட்டியிருந்தான்.

Loving the integration with Maya, it makes deposits and withdrawals so fast and seamless. luckyplayphmaya is the way to go for convenience.
The app version is just perfect. I can play anywhere and the experience is seamless. Truly impressed by 777kphapp.