நெஞ்சம் மறப்பதில்லை 15

கையோடு‌ கை கோர்க்கவில்லை. கண்ணோடு கண் பார்க்கவில்லை. முகம் நாணவில்லை. கால்விரல் கொண்டு தரைக்கோலம் போடவில்லை. ஆனால் பெண்ணவள்‌ தன் காதலைச் சொல்லிவிட்டாள்.

ஆளை அசத்தும்‌ அன்பளிப்பு இல்லை. கொஞ்சும் காதல் வார்த்தைகள் இல்லை. நீ இன்றி நான் இல்லை. நான் இன்றி நீ இல்லை என்ற பிதற்றல்கள் இல்லை. ஆனால் பெண்ணின் மனதை வென்றிருந்தான், அன்னையின் அரவணைப்பாய். தந்தையின் அக்கறையாய்.

இதுவரை நீருக்குள் நீந்தும் மீனாக ஓசையற்று இருந்த அவனது காதலும் பெண்ணவளின் வாய்மொழி கேட்டு டால்ஃபின் மீனாய் குதித்து குதியாட்டம் போட்டது. பெண்ணின் மனதை வென்ற கர்வம் ஆணாய்‌ அவனுக்குள்ளும்.

அவளது கைகளை கோழிக் குஞ்சாய் தன் கரத்தினுள் பொதிந்து கொண்டான், எப்பொழுதும் விட மாட்டேன்‌ என்பவனைப் போல். அக்கணத்தை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். 

கலைந்த கூந்தலும், காய்ச்சலினால் துவண்ட முகமும், வறண்ட இதழ்களுமாய் அவனவள். எனினும் வாடியமலரின் வாசமாய் அவள் அழகு. குறுகிய நாள் கணக்கில் ஒருவருக்கொருவரின் பிணைப்பு அவனுக்கே ஆச்சரியமாய் இருக்க, காதலிக்க நாள் கணக்கோ, மாத கணக்கோ தேவை இல்லாத ஒன்று என்பதை யார் சொல்வது அவனுக்கு. கண்டதும் காதல் வரும். வருடக்கணக்கே ஆனாலும் வாய்ப்பே இல்லாமல் போகும். பார்த்தவுடன்‌ தனக்கான நபரை உள்ளம் கண்டு கொள்ளும். மூளை தான் அதை கிரகிக்க கொஞ்சம்‌ காலம் கடத்தும்.

விபத்தினால் வந்த பந்தமா? அவள் தன் மீது காட்டிய அக்கறையா? அடுத்தவன் பார்க்கும் பொழுது வந்த பொறாமையா? என்று பலவாறு யோசித்தவனுக்கு ஒன்று மட்டும் உறுதியானது. இவள் எனக்கானவள்‌ என்பது.

“சுடுதண்ணி இந்தா கண்ணு! எழுப்பி முகங்கழுவ சொல்லுப்பா!” என்றவாறு பாப்பாத்தி வர,

அவளை விட்டு எழுந்து கொண்டான்.

“நீங்களே எழுப்புங்க ஆத்தா!”

“ஆதியா… ஆதிம்மா…” என்று அவர் கண்ணம் தட்டி எழுப்ப, மெதுவாக இமை பிரித்தவள், சோம்பலாக எழுந்து அமர்ந்தாள்.

“ஏம்மா… உடம்பு‌ சரியில்லைனா கூப்பிடக் கூடாதா? இப்படியா ஒத்தையில கெடந்து அல்லாடுவ?”

“அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி! நான் நல்லாதான் இருக்கே!”

“ஆமா..ஆமா… ரொம்ப நல்லாயிருக்க. பார்த்தாலே தெரியுது.” என்ற அவனது நக்கல் பதிலில், அவனை முறைத்தாள்.

“இந்தாம்மா சுடுதண்ணி வச்சுருக்கேன். பாத்ரூம்ல போய் முகங்கழுவிட்டு வா! கஞ்சி ஏதாவது குடிச்சுட்டு மாத்திரை போடலாம்.”

“இல்ல ஆன்ட்டி! நான் குளிக்கணும். அம்மா அப்பா போட்டோக்கு விளக்கு ஏத்தணும்.” என்றாள் தன் பிறந்தநாளுக்கு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் எண்ணமாக.

“உடம்பு கொதிக்குது. எப்படி குளிப்ப?” என்று அவன் கேட்க,

‘எனக்கு உடம்பு கொதிக்கிறது இவங்களுக்கு எப்படி தெரியும்?’ என்றவாறு அவனைப் பார்க்க,

“ரொம்ப நேரம் எந்திரிக்காம இருக்கவும், நானும் தேவியும் தான் உள்ளவந்து தொட்டுப் பாத்தோம்” என்றான் அவள் பார்வையின் பொருள் அறிந்து.

 “பரவாயில்லை. குளிச்சு சாப்பிட்டு, மாத்திரை போட்டா சரியாயிரும். இது சாதாரண காய்ச்சல் தான்.”

“சரி. அப்ப முதல்ல முகங்கழுவிட்டு, சூடா கஞ்சி குடிச்சுட்டு மாத்திரைய போடு! காய்ச்சல் கொறஞ்சதும் குளிக்கலாம்.” என்றான் சற்றே கண்டிப்புடன்.

“ஆமாங்கண்ணு! குளிச்ச பின்னால காய்ச்சல் அதிகமாயிருச்சுனா என்ன பண்றது?” என பாப்பாத்தி ஆத்தாளும் கேட்க,

“இல்லைங்க ஆன்ட்டி…” என்று மறுத்து பேச வந்தவள் அவனின் முறைத்த பார்வையைக் கண்டு, “சரிங்க ஆன்ட்டி.” என்று வாய்க்குள்ளே முனங்கியவாறே எழுந்து குளியலறை சென்றாள்.

அவளும் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வர, கஞ்சியோடு பாப்பாத்தி வந்தார். வேண்டா வெறுப்பாக கஞ்சியைக் குடித்தவள் கைகளில் மாத்திரையை வைத்தான்.

“ஐயே மாத்திரையா! கசக்குமே?” என்றாள்‌ சிறு‌பிள்ளையாக,

“கசக்காம இனிக்குமா? காய்ச்சல் குறைய வேண்டாமா?”

“அம்மா பொடிபண்ணி கரைச்சு தருவாங்க. சீனியைப் போட்டுட்டு இதையும் குடிச்சுருவேன்.”

“ஏன் இந்த சங்கெல்லாம் வச்சு ஊத்த மாட்டாங்களா? பாவம் பச்சபுள்ள. பொடி பண்ணி ஊத்தணுமாம்.” என்று அவளை கேலி பேசியவன், மாத்திரையை சிறு துண்டுகளாக உடைத்து கொடுத்தான்.

“இப்ப போடு! முழுங்க ஈஸியாயிருக்கும்.” என்றவனை பாவமாகப் பார்த்து வைக்க,

“இது வேலைக்கு ஆகாது. எந்திரிச்சு கிளம்பு! ஹாஸ்பிடல் போய் ஒரு இன்ஜக்க்ஷன் போட்டுட்டு வந்துறலாம்.” என்ற அவனின் பேச்சில்,

“அய்யயோ! ஊசியா? வேண்டாம். தண்ணிய கொடுங்க! நான் இதையே முழுங்கறேன்!” என்றவள் மாத்திரையை போட்டாள்.

“அப்படியே கொஞ்ச நேரம் படு! காய்ச்சல் விட்டதும் எந்திருச்சுக்கலாம்!” என்றவன், பாப்பாத்தியோடு வெளியேறினான்.

பிள்ளைகள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு கிளம்பி இருக்க, அவனும் கடைக்கு கிளம்பியவன்.

“ஆத்தா! ஆதியா எந்திரிச்சதும் எனக்கு ஃபோன் பண்ணுங்க! என்றவன், வீட்டு தேவைகள் என்னவென்று கேட்டுக் கொண்டு கிளம்பினான்.

மதியம் அவன் வரும் பொழுது, எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தாள். சற்று தெளிவாகியிருந்த அவள் முகத்தைப் பார்த்து சற்று நிம்மதியானான். 

 *******************

தலையில் நெருக்ககட்டிய முல்லைப்பூச்சரம், ,ஆரஞ்சும் இளஞ்சிவப்பும் கலந்த சல்வாரில் அவனது தேவதை பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்தாள். மாடியில் இருந்தவாறு கைபிடிசுவரில் குனிந்து முழங்கை குற்றி ஊன்றியவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

கையில் அவன் மாலையில் கொடுத்த வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோருடன் அவளும் சேர்ந்து எடுத்த நிழற்படம் பென்சில் ஓவியமாய் அவள் கைகளில், நேர்த்தியாக வரைந்து கொடுத்து இருந்தான்.

பிள்ளைகள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தேவியை அழைத்தவன், 

“தேவி உனக்கு பூக்கட்ட தெரியுமா?” எனக்கேட்க,

“மாலைக்கட்டே கட்ட தெரியும்ண்ணே. யுடியூப்ல பாத்து கத்துக்கிட்டேன்.” என்றாள்.

“அதை‌ இன்னொரு நாளைக்கு கட்டிக்கலாம். இப்ப, கொடியில் இருக்க முல்லை பூவைப்பறிச்சு தலையில் வைக்கிற மாதிரி சரமா கட்டிக் கொடு ம்மா!”

“எதுக்குண்ணே? புதுசா பூவெல்லாம் கட்ட சொல்றீங்க! கடையில பூஜைக்கி வேணுமா? இன்னைக்கி வெள்ளிகிழமை கூட இல்லியே?’

“நீ கட்டிக்கொடு! அது உனக்கே கொஞ்ச நேரத்துல தெரியும்!” என்றவன் அவனுமே அவளுக்கு பூபறிக்க உதவினான்.

சிறிது நேரத்தில் பிள்ளைகளை‌ ஒன்று கூட்டியவன், “குட்டீஸ் இன்னைக்கி உங்க ஆதிக்காவோட பெர்த்டே. அதை சிம்பிளா செலப்ரேட் பண்ணலாமா?” எனக் கேட்க,

“ஹேய்ய்ய்… ஜாலி! அப்ப இன்னைக்கி ஹோம்வொர்க்ல இருந்து எஸ்கேப்.” என்ற சில பொடுசுகள் ஆர்ப்பரிக்க,

“அதென்ன? உங்க அக்கா! அப்படினா உங்களுக்கு யாரு? நம்ம அக்கானு பொதுவா சொல்லவேண்டியது தான?” என்றான் சதிஷ்.

“ஏன்டா…ஏனிந்த கொல வெறி?”

“உங்களுக்கு முன்னாடியே சீனியரா பிள்ளைகளைக் கவனிச்சுகிட்டவன் நானு. இப்ப நீங்க பெரியவர்ங்கறதால தான் உங்க பொறுப்புல விட்டுட்டுப் போயிருக்காங்க. எங்களுக்கும் பொறுப்பு இருக்குல்ல?” என தனது சீனியாரிட்டியை அவனுக்கு உணர்த்தினான்.

“உன்னோட பொறுப்புணர்ச்சியப் பாத்து புல்லரிக்குதுடா.” என்று கண்ணன் கூறிக்கொண்டிருக்க,

“டேய் சதிஷ்! அண்ணாக்கும் எப்படிடா அக்கானு சொல்லமுடியும். அவர்தான பெரியவரு. அப்ப ஆதிக்கா அவருக்கு தங்கச்சிதானே?” என்று ஒரு பொடுசு தனது மேதாவித்தனத்தைக் காமிக்க,

‘ஐயோ! தெய்வங்களே! நீங்க அவளை எனக்கு ராக்கி கட்ட வைக்காம விடமாட்டீங்க போலிருக்கே.’ என்று எண்ணியவன்,

“ஏன்டா இப்ப முறையாடா முக்கியம்?  அக்காவ கூப்பிடுங்கடா! செலபிரேட் பண்ணுவோம்!” என்றான்.

ஆதியாவும் மதியம் மீண்டும் ஒரு மாத்திரையைப் போட்டு படுத்தவள், பிள்ளைகள் அரவத்தில் கண் விழித்தாள். மன உளைச்சலாலும், அழுததாலும் வந்த சாதாரண காய்ச்சல் என்பதால் இரண்டு வேளை மாத்திரையிலேயே ஓரளவுக்கு தெளிந்து விட்டது.

எழுந்தவள் முகங்கழுவி வந்தாள். அதற்குள் பிள்ளைகளும் அவளது அறைக்குள் வந்து ஆர்ப்பாட்டமாக,

“ஹேப்பி பெர்த்டே அக்காஆஆஆ!” என்று ஒன்று சேர்ந்து கத்தின.

“டேய்! யாருடா சொன்னது?” என்று ஆச்சர்யத்தில் விழி விரிக்க,

“வருஷாவருஷம் ஸ்வீட் வாங்கி தின்ன நாங்க மறந்துட்டோம். ஆனா கண்ணா அண்ணாக்கு எப்படி தெரிஞ்சது?” என சதிஷ் கேட்க,

“அதானே! எப்படிடா தெரியும்?” என்றாள் வியப்பை விழியில் ஏந்தி.

“காலையில உன் ஃபோன்ல இருந்த ஸ்கிரீன் போட்டோல இருந்து தெரிஞ்சுகிட்டேன்.” என்றான் அவள் அறையின் வாயிலில் நின்றவாறே. கையில் தேவி கட்டிக் கொடுத்த முல்லைச்சரம்.

“இந்தா! தலைசீவி இந்த பூவை வச்சுட்டு, உன்னோட அப்பா அம்மா ஃபோட்டோக்கு விளக்கேத்திட்டு வெளியவா! பிள்ளைக ரொம்ப ஆர்வமா இருக்காங்க.” என்றான்.

“எதுக்கு இதெல்லாம்? ப்ளீஸ் வேண்டாமே!” என கெஞ்சினாள்.

“நீ பிறந்தநாள் அதுவுமா இப்படி இருக்கறதுல, உன்ன பெத்தவங்க ஆத்மா சந்தோஷப்படும்னா நீ இப்படியே இரு.” என்றவன் கோபமாக உள்ளே வந்து அவள் கைகளில் பூச்சரத்தை திணித்து விட்டு வெளியேறினான்.

“அக்கா ப்ளீஸ்க்கா! வேற ட்ரெஸ் மாத்திட்டு வாங்கக்கா! ஜாலியா நம்ம விளையாண்டு ரொம்ப நாள் ஆன மாதிரியிருக்கு.” என்று பிள்ளைகள் கூற, 

“சரி. நீங்க போங்க! ரெடியாகிட்டு வர்றேன்.” என்று கூறினாள்.

“இது எங்களுக்காக சொன்னமாதிரி தெரியலியே. சொன்னா… சின்ன பையன்னு சொல்லுவாங்க!” என்றான் சதிஷ்.

“என்னடா சொல்ற!” என புரியாமல் வினவ,

“ம்ம்…காக்கா கருப்புனு சொன்னேன்.”

“காக்கா கருப்புதானேடா?”

“நானும் இப்ப அதைத்தானே க்கா சொன்னேன்.”

“டேய்… வேண்டா. ஓடிப்போயிரு. பிறந்தநாளும் அதுவுமா என்னை வெறுப்பேத்தாத.”

“இப்ப நாங்க பேசுனா வெறுப்பேத்தற மாதிரி தான் இருக்கும்.”

“என்னடா… ஆச்சு உனக்கு?” என குரல் உயர்த்த,

“எனக்கு ஒன்னுமாகல. நீங்க கிளம்பிவாங்க! வாங்கடா நம்ம போகலாம்.” என்று சதிஷ் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

தனது கபோர்டைத் திறந்தவள், அதிலிருந்த புது சல்வாரை பார்த்தாள். சரஸ்வதி ஷாப்பிங் செல்லும் பொழுது, தன் மகளுக்கு இந்த உடை நன்றாக இருக்கும் என்று தோன்றினால் உடனே வாங்கிவிடுவார். அப்படி வாங்கி வந்தது தான் அந்த சல்வார்.

அதை கையில் எடுத்தவள் கண்கள் கலங்க, கண்ணன் கூறியது நினைவிற்கு வரவும் சட்டென இயல்பிற்கு திரும்பினாள். அம்மா அப்பா இருந்தா எப்படி சந்தோஷமா இருப்போமோ அதே மாதிரி இருக்கணும்.” என்று எண்ணிய வளாக.

புத்துடையில், நீண்ட கூந்தலில் முல்லைச்சரம் தோள் தழுவ, நெற்றியில் சிறு பொட்டும், விபூதி தீற்றலும், மை விழியுமாக பூவுக்குள் பொதிந்த வண்ணத்துப்பூச்சியாக வந்தவளை கண்ணன் கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையைப் பார்த்துக் கொண்டே வந்தவள், ‘இன்னைக்கி ஏதோ வித்யாசமா இருக்கே! அக்கறை தாண்டி கண்ணு வேற ஒன்னு சொல்லுதே!’ என்று எண்ணியவாறே வந்தாள்.

“வா கண்ணு! இன்னைக்கி பொறந்த நாளுனு சொல்லவே‌ இல்ல. கண்ணன் சொல்லித் தான் தெரியும்.” என்றவாறு இரு ஆத்தாக்களும் சுடச்சுட கேசரிகிண்டி எடுத்து வந்தனர்.

“அண்ணே! கேசரி வொர்த்தே இல்ல. நீங்க இன்னும் வளறனும்.” என்று சதிஷ்கூற,

“இதுக்கும் மேலயாடா? இப்பவே முகடு தட்டுதேடா?” என அவனது கேலியின் அர்த்தம் புரிந்தும் கேட்க,

“அண்ணே! ம்கூம்.. சான்ஸே இல்ல” என அலுத்துக் கொண்டான் சதீஷ்.

“புரியுதுடா! அண்ணே நிலமை அப்படிடா சதீஷ். அடுத்த வருஷம் பாருடா சமாய்ச்சிடறே!”

சண்முகம் இல்லாத சமயத்தில் உரிமையாக பணம் எடுக்கத் தயங்கினான். தன்னவளுக்கு என வாங்கும் பொழுது அது தன்னுடைய தனிப்பட்ட சம்பாத்தியமாக இருக்க வேண்டும் என‌ நினைத்தே பணத்தை எடுக்கவில்லை.

கேசரியையே வட்டமாக வடிவமைத்து அதன் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி வைத்து ஊதி, கேசரி வெட்டினாள்.

அனைவரும் கைதட்டி வாழ்த்து பாட, வாங்கி வந்த மிக்ஸரோடு, கேசரியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டம் முடிய, அவளது கையில் சுருட்டிய சார்ட் பேப்பரைக் கொடுத்தான்.

அதை விரித்து பார்க்க, பெற்றோருடன் அவளிருந்த நிழற்படத்தை ஓவியமாகத் தீட்டி இருந்தான்.

“வாவ்! சூப்பரா இருக்கு கண்ணன். எப்ப வரைஞ்சீங்க?” என்றாள் ஆச்சரயம் மேலிட.

“உன்னோட ரூம்ல இந்த ஃபோட்டோவைப் பார்த்தேன். அதை எடுத்துட்டுப் போய் தான், மதியம் வரைஞ்சேன்.”

“உங்களுக்கு ட்ராயிங்க் தெரியுமா?”

“தெரியல. வரையணும்னு தோணுச்சு. ட்ரை பண்ணேன். ஈஸியா இருந்துச்சு.”

டெக்ஸ்டைல்ஸ் தொழில் சம்பந்தமாக, ஆடை வடிவமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக டிசைனிங் கற்றுக் கொண்டதன் விளைவாக அவனுக்கு பென்சில் ஓவியம் பழக்கமாகி இருந்தது.

அதையே நிலவொளியில் பவளமல்லி திட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள், அருகில் அரவம் கேட்க, நிமிராமலே தெரிந்தது யாரென்று.

“ஒரு ஓவியமே ஒரு ஓவியத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறதே! அடடே! ஆச்சர்ய குறி!” என்றவாறு வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இன்னைக்கு ஏதோ வித்யாசமா இருக்கே.” என்றாள் அவனைப்‌பார்த்து புருவம் சுருக்கி.

“அப்படியா? எனக்கொன்னும் அப்படி தெரியலயே. ஆனா இன்னைக்கு எனக்கும் மறக்கமுடியாத நாள் தான்.”

“அப்படி என்ன ஸ்பெஷல் இன்னைக்கி. அதென்ன கையில? இன்னொரு ட்ராயிங்கா?” என்றாள் அவன் கைகளில் இன்னோரு சுருட்டிய சார்ட்டைப பார்த்தவள்.

“ஆமா! ஆனா இது எனக்காக.” என்றான்.

“கொடுங்க பாக்கலாம்.” என்று அவள் கேட்க, அவள் கையில் கொடுத்தான்.

விரித்துப் பார்த்தவள் விழியும் விரிய, சற்று கோபத்துடன், “யார் உங்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது கண்ணன்.” என்றாள்.

“காலையிலேயே ஒரு பட்சி மயக்கத்துல சொல்லுச்சு தியா.”

“என்னதிது பேரெல்லாம் புதுசா இருக்கு?”

“ஏன் அதுதானே உன்பேரு. இதுல புதுசா என்ன இருக்கு?”

“பேரை சுருக்கற உரிமையை யார் கொடுத்தது?”

“ஏன் தியா? மயக்கத்துல இருந்தாதான் மனசுல இருக்கிறதை ஒத்துப்பியா? ஆனா நான் சொல்லணும்னு அவசியமே இல்லை தியா. எம் மனசுல நீதானிருக்க. அது உனக்கும்‌ தெரியுது. சாயங்காலம் நான் கொடுத்த ட்ராயிங் பாத்து வரஞ்சது. ஆனா இது என் மனசுல இருக்கற உன் உருவத்தை மனக்கண்ல பாத்து வரஞ்சது. அதுல விட இதுல தான் நீ தத்ரூபமா இருக்க. எனக்குனு வேர யாரும் இருப்பாங்களோங்கற எண்ணம் துளியுமில்ல. உள்ளுணர்வு பொய் சொல்லாது. எனக்கானவள் நீ மட்டும் தான்.” என்றான் அவளைப் பேசவிடாமல் சற்று கோபமாக. 

அதில் ஆதியாவை மட்டும் பவளமல்லிதிட்டில் அமர்ந்து, எதிர்நோக்கும் தோற்றத்தில் பென்சில் ஓவியமாக, தத்ரூபமாகத் தீட்டி இருந்தான். 

அவளோ காய்ச்சல் மயக்கத்தில் தன் காதலை வெளிப்படுத்த, இவனோ தனக்கு உரிமையானவள் நீ என்பதை கோபமாக வெளிப்படுத்தினான், அவளது காதலை‌ மனதுக்குள் போட்டு அவள் மருகுவது பொறுக்க மாட்டாமல்.

“இல்ல கண்ணன்… நாளைக்கே யாராவது உரிமை கொண்டாடிட்டு வந்தா, என்னால விட்டுக் கொடுக்க முடியாது.” என்று குரல் தளுதளுக்க,

“யாரு விட்டுக் கொடுக்கச் சொன்னது. கண்ணன்னு பேரவச்சுட்டு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனா வாழ முடியும் சொல்லு?” என்று அவளைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க,

“ஓஹோ… ஐயாவுக்கு அப்படியொரு ஆசை இருக்கா? எவளாவது வரட்டும். அப்ப தெரியும் இந்த ஆதியா யாருனு.” என்று அவள் சண்டைக்கோழியாய் சிலிர்த்து நின்றாள்.

“இப்பவே எனக்கு தெரியுதே! நீ யார்னு.” புன்னகை முகமாகக் கூற,

“என்ன தெரியுதாம்?” 

“இந்த கண்ணனின் ராதை நீதான்னு.” புருவம் உயர்த்தி அவன் கூறிய விதத்தில், பெண்ணின் மனம் மயங்கித் தான் போனது.

பேசிக்கொண்டே அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டவன்,

“தியா…இந்த நிமிஷம் மட்டும் உண்மை. இந்த சந்தோஷத்தை மனசு அப்படியே அனுபவிக்கட்டும். அதைப் போட்டுக் குழப்பாதே!” எனக் கூறியவனின், தோள் சாய்ந்திருந்தாள் கன்னியவள், அந்தக் கண்ணனின் ராதையாக. 

உரிமையோடு உச்சிமுத்தம் வைத்தான் உன்னவன் நான் எனும் விதமாக.

இந்த நாளையே மறக்கமாட்டேன் என்று கூறியவன்‌ அவளையே மறந்தது‌ எங்கனமோ?

***

2 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top