நெஞ்சம் மறப்பதில்லை 4

நண்பர்கள் இருவரும் கம்பெனி பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருக்க,

ஆதியாவோ, தன் சுயம் மறந்து, சுற்றம் மறந்து சத்யபிரகாஷ் மீதே தன் பார்வையைப் பதித்திருந்தாள்.

அந்தக் கண்களும், அமைதி தரும் சிரிப்பும், அசத்தும் முக வெட்டும், இந்த வயதிலும் வாட்ட சாட்டமாக தோற்றமளித்த உடலமைப்பும் பெண்ணவளுக்கு

‘அவர்’ தன்னவனின், மூதாதையர் என்பதை சொல்லாமல் சொல்லியது.

எந்த முகத்தைப் பார்த்தால், தான் பலவீனப்பட்டு விடுவோமோ என அஞ்சி, விலகி இருக்கின்றாளோ அம்முகத்தின் சாயலைக் கண்டவளுக்கு, இப்பொழுதே ஓடிச் சென்று தன் கண்ணனின் தோள் சேர… உள்ளம் பரபரத்தது.

தன் மனம் செல்லும் போக்கினை உணர்ந்தவள், சற்று நிதானம் அடைந்து, ‘அதற்கும் காலம் கைகூடும். நிதானமாக இரு ஆதியா!’ எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் எதிரில் இருப்பவர்கள் மீது வலிந்து கவனத்தைச் செலுத்தினாள்.

“அப்ப… நீ சொல்றதப் பாத்தா, இன்னும் கொஞ்சம் வேலைக்கு ஆளுங்கள சேக்கணும் போல இருக்கே?” என்று சத்யபிரகாஷ் கூற,

“ஆமா சத்யா! பேக்கிங் செக்க்ஷனுக்கு தான் ஆளுங்க தேவைப்படுவாங்க. நான் கொஞ்ச நாளா ஆர்டர் அதிகமா எடுத்துக்கலை. ஆனா நீ வந்துட்டா… உன் லெவலுக்கு கம்பெனியை இம்ப்ரூவ் பண்ணும் போது வொர்க்கர்ஸ் தேவைப்படுவாங்க.”

சத்யபிரகாஷ் இருந்த வரைக்கும், மிளகாய், மஞ்சள் போன்ற மசாலா பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து அப்படியே வாடிக்கையாளர்களுக்கு மாற்றி விட்டுக் கொண்டிருந்தனர்.

பின் கால மாற்றத்திற்குத் தகுந்த மாதிரி எடை வாரியாக பாக்கெட் போடவும் ஆரம்பித்தனர்.

சத்யபிரகாஷ் அதையும் தாண்டி, அவர் ஆரம்பித்த கம்பெனியில் எல்லா வகையான மசாலாப் பொடி வகைகளையும் தயாரித்தார்.

மூலப் பொருட்கள் தட்டுப்பாடாகும் சமயங்களில் நாதன் அன்ட் கம்பெனியிடமிருந்தும் கூடப் பெற்றுக்கொள்ளப்படும்.

இவரது மசாலா வகைகள் மக்களிடையே வெகு பிரசித்தம்.

அதன் பின் மகன் ரவிப்பிரசாத் விருப்பத்தின் பேரில் டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் கால் பதித்தனர். 

தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் டெக்ஸ்டைல்ஸ் துறையின் பொறுப்பை, சிறு வயதிலேயே, சூர்யபிரகாஷ் ஏற்றுக் கொண்டான். முதலில் தடுமாறினாலும் தாத்தாவின் வழி காட்டுதலுடன் விரைவில் தொழில் சூட்சமம் கற்றுக் கொண்டான். தற்சமயம் அவன் ஆசைப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் துறையிலும் கால் பதித்துக் கோலோச்சி வருகிறான்.

இப்படிப்பட்டவர்கள் பொறுப்பில் வரும் கம்பெனி, மேலும் விரிவாக்கம் பெரும்பொழுது ஆள் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பே!

“சார்! நான் ஒன்னு சொல்லலாமா?” என ஆதியா கேட்க,

“சொல்லும்மா!” என சத்யபிரகாஷ் ஊக்குவித்தார்.

“சர்! பேக்கிங் செக்ஷனுக்கு பெரும்பாலும் லேடீஸ் தான் வருவாங்க. அவங்களுக்கு பிரச்சினையே கரெக்ட் டைமுக்கு வீட்டுக்குத் திரும்பி போறது தான். அப்ப தான் வீட்ல போய் பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனிக்க முடியும்.‌ போக்குவரத்துக்கு மட்டும் நாம ஏற்பாடு பண்ணிக் கொடுத்தோம்னா… நேரங்காலம் பத்திக் கவலைப்படாம வருவாங்க. அடிக்கடி வேலய விட்டும் நிக்க மாட்டாங்க.”

“சரிம்மா! இதப் பத்தி எம்பேரன் கிட்ட பேசிப் பாக்குறே!” என்றவர், 

“சரி ராமா! கிளம்பலாமா? என்றார்.

பேசிக் கொண்டிருக்க மணி பனிரெண்டை நெருங்கியது. அவர்கள் பேச்சில் கலந்து கொண்டாலும், மனம் மட்டும்… அலை மேல் படகாய்.

“ஆதியா! உன் வண்டில‌ தான வந்திருக்க?” ராமநாதன் கேட்க,

“ஆமா சர். சர் ஒரு ஆப்ளிகேஷன் எனக்கு ஹாஃப் டே லீவு வேணும். நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்பலாம்னு இருக்கே!”

“இதுக்கு எதுக்கும்மா லீவெல்லாம்? நீ வண்டியிலேயே அவ்ளோ தூரம் ஆஃபிஸுக்கு வந்துட்டு ,மறுபடியும் வீடு திரும்ப ரெம்ப கஷ்டமா இருக்கும். நீ நாளைக்கே ஆபிஸுக்கு வாம்மா.”

சத்யபிரகாஷ் ‌கூறியதுபோல், இவர்கள் மக்களோடு மக்களாக வியாபாரம் செய்து பழகியவர்கள்.கார்பரேட் கம்பெனிகள் மாதிரி மணிக்கணக்கு, நிமிடக்கணக்குப் பார்க்கும் கரார் பேர் வழிகள் கிடையாது.

“ரொம்ப தேங்ஸ் சர்! நான் கிளம்பறே.” எனக் கூறி விட்டு இருவரிடமும் விடை பெற்றாள்.

நண்பர்களும் அங்கிருந்து கிளம்பினர்.

சாலையில் வண்டியைச் செலுத்தியவளுக்கோ மனதில் பல வகையான எண்ணங்கள். அனிச்சை செயலாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள்

அந்நேரத்தில் ஆதியாவை எதிர் பார்க்காத லஷ்மியும், சற்று பதற்றமாக, “என்னாச்சு ஆதியா, உடம்பு ஏதும் சரியில்லயா? இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.” எனக் கேட்க

“ஆமா ஆன்ட்டி. இவ்ளோ தூரம்‌வெயில்ல வண்டி ஓட்டிட்டு போயிட்டு வந்தது தலவலிக்குது. அதா ரெஸ்டாரென்ட்ல இருந்து நேரா வீட்டுக்கு வந்துட்டே.”

“உனக்கு தான் வெயில் சேராதுல்ல. உன் வேலைய மட்டும் பாக்க வேண்டியது தான. ஏன் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கற?” என லஷ்மி கடிய,

“எம்.டி.கூப்பிடும் போது எப்படி ஆன்ட்டி மறுக்க முடியும்?”

“அப்படி வேல பாத்தே ஆகனும்னு என்ன அவசியம் வந்தது. அந்த நிலமையிலயா உன்னையப் பெத்தவங்க விட்டுட்டுப் போயிருக்காங்க?” என லஷ்மி கேட்டுக் கொண்டே இருந்தாலும் கண்கள் என்னவோ ஆதியாவைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

‘முகம் வாட்டமா இருக்கே… இது வெயில்ல வந்த வாட்டமா? இல்ல வேறெதுவுமா? பெத்தவங்க இழப்ப கூட கொஞ்ச நாள்ல சமாளிச்சுத் தெளிஞ்சுட்டா. ஆனா, இவ வாழ்க்கையில முடிவெடுக்க‌ இவ்வளவு குழம்புறாளே?’ என யோசித்துக் கொண்டே

“ஆதியா! சூடா காஃபி போட்டு எடுத்து வரவா? தலைவலிக்கு இதமா இருக்கும்.” என கனிவாக கேட்க,

“வேணா ஆன்ட்டி. காஃபி குடிச்சா தூங்க முடியாது. ஒரு மாத்திரையப் போட்டுட்டு படுக்கறே. தூங்கி எழுந்தா சரியாயிரும், எனக் கூறிவிட்டு தனதறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

வெளியிலிருந்து வந்தவளுக்கு உடை மாற்றி ஃப்ரெஷ் அப் ஆகும் எண்ணம் கூட இல்லை.

தனிமையின் போது துணைக்கழைக்கும் ‘ஸ்பாட்டிஃபை’ யையும் மனம் நாடவில்லை.

‘வேலையைத் தொடரலாமா? வேண்டாமா? சத்யபிரகாஷ் சர் தான் பொருப்பு என்றாலும், கண்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்பொழுது கண்ணனின் ‘அந்நியப் பார்வையைச்’ சந்திக்கும் சக்தி தனக்கு இருக்கிறதா?’ எனப்‌ பலவாறாக மனம் குழப்பிக் கொண்டிருந்தது.

“நீ சரியான குழப்பவாதி. உன்னய இப்படியே‌ விட்டா ,எனக்கு சாதகமா யோசிக்கிறேன்னு, தேவையில்லாத முடிவத்தான் நீ எடுப்ப. உனக்கு இந்த மாதிரி அதிரடி முடிவு தான் சரி. நான் எந்த நிலையில் இருந்தாலும் உன்னை விட்டுக் கொடுக்க என்னால முடியாது.”

அன்று அவளவன் சொன்ன வார்த்தைகள் இன்றும் ஆழ்கடல் முத்தாய் அவள் மனதில்.

“என் மகன் எனக்கு இப்படியே வேணும் ஆதியா! சில விஷயங்கள காலத்தின் கையில் விட்டுறுவோம். காலம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படலாம்.”

அன்று மங்கையர்க்கரசி தன்னிடம் கேட்டுக் கொண்டதும் நினைவில் வர…

மழைக்கு முன் தோன்றும் வெக்கையாய், மனதில் ஒரு வெப்பச்சலனம். வெப்பச்சலனத்தின் விளைவாய், கண்களில் கண்ணீர் மழை.

‘என்ன நா செய்வே

உன்னோட சேர

என்ன நா செய்வே

வான் மேகம் தூர

என்ன நா செய்வே

என் தாகம் தீர

என்ன நா செய்வே

உன் கூட பாட

என்ன நா செய்வே

உன் கூட வாழ

என்ன நா செய்வே

உன் கூட வாழ

என்ன நா செய்வே

உன்னோட சேர….

அவளது மனம் அவளுக்காய் தன்னால் , ட்யூன் செய்தது.

2 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top