தெம்மாங்கு பூந்தமிழே 20

20

‌‍”அப்ப எல்லாமே தெரிஞ்சு தான் இவ்வளவையும் நடத்தியிருக்க?” மஞ்சுளாதேவியால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு பெரிய துரோகம். மகன் பெரியவர்கள் வாக்குக்குக் கட்டுப்பட்டு தனது வாழ்க்கையையே பணயம் வைத்து வீணாக்கி விட்டானே என மனம் ஆத்துப் போயிற்று. களையிழந்து அமர்ந்திருந்த மகனைப் பார்க்க பார்க்க மனதே ஆறவில்லை மஞ்சுளாவிற்கு.

“……..”

“அன்னைக்கி என்னமோ எங்க குடும்ப ரெத்தமாயிருந்தா என்னையத் தவிக்கவிட்டு வேடிக்கை பாக்குமான்னு கேட்டியே. இதுவே உங்க அண்ணன் மகனாயிருந்தா இப்படித்தான் ஓரவஞ்சனை பண்ணியிருப்பியா? யாரோ எவரோ பெத்த பிள்ளைனு தானே அல்லையில குத்தியிருக்க. இப்படி எம்புள்ள வாழ்க்கைய சீரழிச்சுட்டீயே?” என மஞ்சுளாதேவி மருத்துவமனை என்றும் பாராமல் கண்ணீரோடு கோபத்தில் கத்த, 

“என்னமோ நான் மட்டும் தப்பு பண்ண மாதிரி பேசுறீங்க, உங்களுக்கு தோதா இருக்கணும்னு தானே உங்க அக்கா மகன தத்து எடுத்தீங்க. எங்க வகையில யாரையாவது எடுத்திருந்தா இந்தளவுக்கு பாசம் காட்டியிருப்பீங்களா? பெத்த பிள்ளய உங்க அக்கா எதுக்கு தூக்கிக் கொடுத்தாங்க. மத்த மூனு பிள்ளைகளும் நல்லாயிருக்கணும்னு தானே. நானும் என் மக இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சே. இதுல என்ன தப்பு.” என அசராமல் தனது தரப்பை நியாயப்படுத்தினார் அகிலாண்டம்.

“ம்ம்மா… இது ஹாஸ்பிடல். உங்க சண்டைய வெளில போயி வச்சுக்கோங்க.” என செவிலி கண்டித்துவிட்டு சென்றார். லேபர் வார்டில் ஆப்ரேஷன் தியேட்டர் முன்தான் இவர்கள் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. 

“ரெண்டு உசுருல ஒன்னு தான் எங்களால காப்பாத்த முடியும். அதுவும் பெரிய உசுருக்கு உத்திரவாதமில்லை.” என  மருத்துவர் கூற அனைவருக்கும் அதிர்ச்சியே. 

“என்னங்க இப்படி சொல்றீங்க?” என மஞ்சுளாதேவி ஆதங்கமாகக் கேட்க, 

“இது இவங்ககிட்ட ஏற்கனவே சொன்னதுதான். அவங்ககிட்டயே கேட்டுக்கோங்க.” என அகிலாண்டத்தைக் கைகாட்டி விட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று விட்டார் மருத்துவர். 

”இங்க பேஷண்ட்டுக்கு நெருங்கின சொந்தம் யாருங்க. இந்த ஃபார்ம்ல ஒரு சைன் பண்ணுங்க.” என ஆப்ரேஷனுக்கு முன் வாங்கப்படும் கன்சென்ட் ஃபார்மில் செவிலி கையெழுத்துக் கேட்க ருத்ரன் முன்னுக்கு வந்தான். 

பெரிய உசுருக்கு உத்திரவாதமில்லை என டாக்டர் சொல்லிச் சென்றதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கைகள் நடுங்க ஃபார்மில் கையெழுத்திட்டு கொடுத்தான். 

  காதலாகி கசிந்துருகி, கூடிக் களித்து வாழவில்லை தான். ஓருயிர் ஈருடல் என உருகவில்லைதான். எனினும் ஈருடல் ஓருடலாகி மனைவி என தன்னோடு வாழ்ந்து, தனது உயிருக்கு உருவம் கொடுத்தவள் அல்லவா. 

நாம விரும்பறவங்கள விட, நம்மை விரும்பறவங்க கிடைக்கிறதுதான் அதிர்ஷ்ட்டம் என காலங்காலமாக கூறப்படும் காதல் தோல்வி வேதாந்தத்தையே இவனும் கருத்தில் கொண்டு, காவியக்காதல் செய்யவில்லை எனினும், மனதைத் தேற்றிக் கொண்டு சராசரி வாழ்க்கைக்குப் பழகியிருந்தான். 

அமராவதிக்கு, அமிர்தா மீதுதான் துவேஷமே ஒழிய, அவள் விரும்பிய கணவன் மீது இல்லை. அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவளது படபடப்பு கண்டு தயங்கியவனையும் தயங்காமல் தாங்கிக் கொண்டாள். 

மூச்சிறைக்க நிறைமாத வயிற்றோடு வலிப்பு வந்து மயங்கி விழுந்தவளை மருத்துவமனை கொண்டுவந்து சேர்த்துவிட்டு மாமனுக்கு கைபேசியில் தகவல் கூறினான் அழகர். மஞ்சுளாவும் விவரமறிந்து பதறியடித்து வந்திருந்தார். 

ஏழாம் மாதமே மகளுக்கு வளைகாப்பு போட்டு தன்னோடு அழைத்துக் கொண்டார் அகிலாண்டம். கருத்தரித்ததில் இருந்தே மகளை அடிக்கடி தன்வீட்டிற்கு அழைத்துச் சென்று கைவைத்தியம் பார்க்க வேண்டும் என வாரக்கணக்கில் வைத்துக் கொண்டார். 

கல்யாணமாகி குழந்தை உண்டாக ஒரு வருடமான நிலையில், புலம்பித் தள்ளிவிட்டார் அகிலாண்டம். 

“ம்மா… அவங்க என்கிட்ட வரவே தயங்குறாங்க ம்மா. அந்த நேரத்துல ரொம்ப மூச்சடைக்குது.” என சங்கோஜத்துடன் அம்மாவின் முகம் பார்க்காமல் மகள் கூற, வழக்கமாக அவளை காண்பிக்கும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அகிலாண்டம். 

மருத்துவர் இவரை அடிக்காத குறையாக வெளுத்து வாங்கிவிட்டார்.‌

“எப்படி நீங்க இந்த நிலையில கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஏற்கனவே சொன்னது தானே. உங்க பொண்ணால குடும்ப வாழ்க்கைய நடத்த முடியாதுனு. குழந்தையும் ரொம்ப ரிஸ்க். அது அவங்க உயிருக்கே ஆபத்துனு தெரியாதா?” என அமராவை வெளியே அனுப்பிவிட்டு அகிலாண்டத்தை கோபமாக விலாசித்தள்ள, 

“அதுக்குனு வயசுப் புள்ளய வாழவச்சுப் பாக்க வேண்டாமா டாக்டர்.” என கண்கலங்க, 

“அதுக்கு உங்க பொண்ணு உடம்பு ஒத்துழைக்க வேண்டாமா? இது எவ்வளவு ரிஸ்க் தெரியுமா?” என்றவரிடம்,

“அவளுக்கு மூச்சுத் திணராமயிருக்க மாத்திரை மட்டும் கொடுங்க. அவ உயிரோட இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும்.” என மருத்துவரிடம் மன்றாடி மாத்திரைகளை வாங்கி வந்தார். அப்பொழுதே குழந்தை உண்டானால் சிரமம் என்று தான் சொல்லியனுப்பினார். 

குழந்தை உண்டாகாமல் போனால் எங்கே இதைக் காரணம் காட்டி அவனுக்கு அக்கா மகளை மறுமணம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் உதித்தது. 

எப்படியிருந்தாலும் மகள் வாழ்வு அல்பாயுசு என்று தெரியும். சொத்துக்கு வாரிசு வந்துவிட்டால் போதும் என மனம் நினைத்தது.

சிறுவயதில் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலால் வரும் சாதாரண வீசிங் பிரச்சினை என்று அதற்கே பொதுவான வைத்தியம் பார்க்கப்பட்டது. மற்ற பிள்ளைகள் மாதிரி ஓடியாடி விளையாடும் குழந்தையெனில் ஆரம்பத்திலேயே பிரச்சினை பெரிதாகத் தெரிந்திருக்கும். கால் குறைபாட்டால் அதிகம் அலட்டிக்கொள்ளாத சவளைப் பிள்ளையாக அவளை கைக்குள் வைத்து வளர்க்க, பிரச்சினை வெளியே தெரியவில்லை. வளர்ந்து ஆளானபிறகு அதிகமாக மூச்சுவிட சிரமப்பட, மருத்துவமனை சென்ற பொழுதுதான் விஷயமே தெரியவந்தது. அவளுக்கு இதயத்தசைகள் சுருங்கி விரிவதில் பிரச்சினை என்று. ஆனால் காலம் கடந்து தெரிந்த உண்மை. 

பெண்பிள்ளை குறை வெளியே தெரியக்கூடாதென மறைத்துவிட்டார் அகிலாண்டம். கணவனிடம் கூட கூறவில்லை. அவர் அந்த சமயத்தில் தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக மும்முறமாக இருந்தார்.

அடிக்கடி மருத்துவமனை கூட்டிச் செல்ல, காரணம் கேட்ட கணவரிடம் வயிற்றுவலிப் பிரச்சினை என காரணம் கூறி மலுப்பினார். வழக்கமான ஆண்கள் போல அவரும் அலசி ஆராயாமல் பெண்பிள்ளைகள் பிரச்சினை என்று அவரும் கண்டுகொள்ளவில்லை. மனைவிக்கே மாதவிடாய்ப் பிரச்சினை என்றால், இன்றளவும் ஒதுங்கிப் போகும் ஆண்கள் தான் அதிகம். இதில் மகளுக்கு எனவும் மனைவியே பார்த்து கொள்வாள் என கண்டுகொள்ளவில்லை. இதெல்லாம் பெண்களின் அந்தரங்கப் பிரச்சினையாகிவிடுகிறது. 

“ஏம்மா… இதுக்கெல்லாம் என்னென்னமோ டெஸ்ட் எடுக்கறாங்க.” என மகள் சந்தேகம் கேட்க.

“தலவலின்னு வந்தாலே ஆயிரத்தெட்டு டெஸ்ட் எடுத்துட்டு தானே விடுறாங்க. உனக்கும் ரொம்ப நாளா இந்தப் பிரச்சினை இருக்குல்ல. அதனால எடுப்பாங்களாயிருக்கும். நமக்கென்ன தெரியும். அவங்க சொல்றதத்தானே கேக்கணும்.” எனக் கூறி மகளின் வாயை அடைத்தார். 

 தலையில் இடியாய் இறங்கியது மருத்துவர் சொன்ன செய்தி. அவளுக்கு இதயத்தசைகள் சுருங்கி விரிவதில் பிரச்சினை எனவும், கல்யாணம், தாம்பத்தியம், குழந்தையெனில் சிரமம் எனவும் கூற, தனிமையில் கண்ணீர்‌ வடித்தார். தாய்க்கு தலைப்பிள்ளை, தகப்பனுக்கு கடைசிப் பிள்ளையென, தாய்க்கு எப்பவும் தலைப்பிள்ளை தானே செல்லப் பிள்ளை. தனக்கு முதன் முதலில் அம்மா என அங்கீகாரம் கொடுக்கும் பிள்ளை மீது சற்று பாசம் தூக்கலாகத்தானிருக்கும். அதன் பாசத்தை பங்கு போட வேறு பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் அதற்கொரு முக்கிய காரணம். இது அடுத்தடுத்த பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. 

இவள் வேறு கால் குறைபாட்டால் பச்சாதாபத்தோடு, அன்னையின் பாசத்தை முற்றிலுமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள். தனது செல்ல மகளின் வாழ்க்கை பாதியிலேயே கருகி விடுமென அகிலாண்டம் எதிர் பார்க்கவில்லை. அழுது ஓய்ந்தவர், வாழும்வரை மகள் எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டும் என எண்ணினார். 

வயதுக்கு வந்த பிள்ளையை வீட்டில் வைத்துக் கொண்டு அடுத்த பிள்ளைகளுக்கும் எதுவும் நல்லது பண்ணி பார்க்கவும் முடியாதே என்பதும் அதற்கு முக்கிய காரணம். பெண் எடுப்பவர்களும், பெண் கொடுப்பவர்களும் யோசிப்பார்கள். ருத்ரனைப் பார்க்கும் பொழுதெல்லம் அமராவின் கண்களில் தெரிந்த மயக்கமும், காதலும் அவரை எதையும் யோசிக்க விடவில்லை. மகள் விருப்பமே முக்கியமாகப் பட்டது. அமராவுக்கென ஏற்கனவே பேசி வைத்தவன் தானே ருத்ரன். அதையே பணயமாக்கி மகளை மணம் முடித்து வைத்தார். 

குழந்தை உருவாவது கடினம் எனத் தெரிந்தாலும் எங்கே இதைக் காரணம் காட்டி அமிர்தா உள்ளே வந்து விடுவாளோ என்கிற பயம். எதிர்பாரா விதமாக அமராவதியும் சூல்கொள்ள, 

ருத்ரனும் இதற்கிடையில் தனது தகுதியை உயர்த்திக் கொள்ள அடுத்தடுத்து தனது முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியிருந்தான. 

கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்தான். விசேஷங்களுக்கு ஆர்டர் எடுப்பதில் கவனமானான். கிடைத்த ஆர்டர்கள் அனைத்தையும் அவனது நேரடி கண்கானிப்பிலேயே செய்து அனுப்பினான். தரமும், ருசியும் அவனது கைப்பக்குவத்தை பறைசாற்ற தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியது. இரவு வீடு திரும்பவே பத்து மணிக்கு மேல் ஆனது. அமராவுக்கு மாடியேறுவது சிரமம் எனத்தெரிந்து திருமணம் முடிந்த மறுநாளே தனது அறையை கீழே மாற்றிக் கொண்டான். 

அடுத்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் பற்றி விபரம் சேகரித்தான். லோக்கல் டி.வி. சேனல்களில் விளம்பரம் செய்தான். தட்டுத்தடுமாறி அதன் சூட்சமங்களை கற்றான். படிப்படியாக ஹோட்டல், கேட்டரிங் சர்வீஸ், ஈவென்ட் ஆர்கனைசிங் எல்லாம் பிரபலமாகத் தொடங்கி, அவனுக்கென ஒரு அடையாளம் உருவாகத் தொடங்கியிருந்தது. தனது கவனம் முழுவதும் கடிவாளம் கட்டிய குதிரையாக அதிலேயே வைத்திருந்தான். 

இரவு தாமதமாக வருபவனுக்காக காத்துக் கொண்டு இருப்பவள் மீது காதல் வரவில்லை எனினும் கரிசனம் வர சற்று சீக்கிரம் வீடுவர ஆரம்பித்தான்.

அவளது படபடப்பு தெரிந்து அவளை அனுகத்தயங்கினாலும், அமராவதி தயங்கவில்லை. தாய்மை தள்ளிப் போவது அவளுக்குமே பயத்தைக் கொடுத்தது. 

பிள்ளை இல்லையென இனி தத்து எடுக்க மாட்டார்கள். தயங்காமல் அமிர்தாவை மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள் என மனம் எச்சரித்தது. 

“ரொம்ப உணர்ச்சிவசப் படுற அமரா.” என தள்ளிப் படுக்கும் நாட்களில், “அதென்னமோ நீங்க கிட்ட வந்தாலே இப்படி ஆகிறுது.” என அவள் வெட்கப்பட்ட நாட்களும் உண்டு.  

“ஏன், அவ நெனப்பு வந்துருச்சாக்கும்.” என அவனை சீண்டிவிட்டு, ஒதுங்கிப் படுப்பவனிடம் காரியம் சாதித்துக் கொண்ட நாட்களும் உண்டு. தன் மீதுள்ள அதிகப்படியான ஆசை என மனதை தேற்றிக் கொண்டான்.

அவன் மறக்க எண்ணினாலும், அமராவதி அவளை மறக்கவிடவில்லை என்று தான் சொல்லவேண்டும். குழந்தை உருவானது அறிந்து, தனது இழப்புகளை தந்தையான சந்தோஷத்தைக் கொண்டாடி ஈடுகட்டினான். 

அம்மாவிற்கு உடம்பில் இருக்கும் பிரச்சினைகள் போதுமென்று, வயிற்றிலிருந்த குழந்தை மசக்கைப் பிரச்சினைகளை அமராவுக்குக் கொடுக்கவில்லை. 

முதல்முறை தான் ருத்ரன் செக்அப்பிற்கு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அடுத்த முறையெல்லாம் அகிலாண்டமே மகளை அழைத்துச் சென்றார். 

“என் மக வந்த நேரம். இப்பதான் தொழில் சூடுபிடிக்குது. இதுக்குனு பாக்குற வேலைய விட்டுட்டு வராட்டி என்ன. ஆளுகளா இல்ல. நான் கூட்டிப் போயிக்கிறேன்.” என அகிலாண்டம் ருத்ரனை தவிர்க்க,

இன்று அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் குமைந்து போய் உட்கார்ந்திருந்தான். அவர் என்னதான் சொல்லியிருந்தாலும் தானும் உடன் வந்திருக்க வேண்டுமோ‌‌. அப்படி வந்திருந்தால் ஆரம்பத்திலேயே உண்மை தெரிந்திருக்குமே.’ என மனசாட்சி அவனைக் கொன்று மென்று தின்றது. 

இதற்கு மருத்துவர் இவனைப் பார்த்து கேள்வி கேட்டதும் ஒரு காரணம். 

“பொண்டாட்டி கட்டிட்டா மட்டும் போதுமா? அவங்க ஹெல்த் கண்டிஷன் தெரிஞ்சுக்க வேண்டாமா? எத்தன தடவ இவங்க கிட்ட ஹஸ்பென்ட் வரலியானு கேட்டுருக்கே. இதுக்கு கூட பொண்டாட்டி கூட வராம, அப்படி சம்பாதிச்சு என்ன சார் பண்ணப்போறீங்க?” எனக் கேட்க, மனம் குன்றிப்போனான். 

தன் வாழ்க்கையை பெரியவர்கள் கைப்பந்தாக உருட்டி விளையாடினால், விதியும் உடன் சேர்ந்து கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்திருக்கிறது என நினைத்தவனுக்கு வாழ்க்கை கசந்து போயிற்று. 

“எனக்கு இதயம் பலவீனமா இருக்காம். அதனாலதான் உங்கள பிடிச்சு வைக்க முடியல போல.” ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தவள் கண்ணீர் வடிய கைகளைப் பிடித்துக் கொண்டு தன்னிடம் கூறிச்சென்றதே தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்தது. ஏனோ தன் பாவக்கணக்கு கூடிக்கொண்டே போவது போல் கழிவிரக்கம் பிறந்தது. தன்னால் யாருக்குமே சந்தோஷம் இல்லையோ என மனம் புளுங்கியது. 

அகிலாண்டம் யாருடைய கேள்விக்கும் பதில் கொடுக்கும் நிலையில் இல்லை. இனி என் மகள் எனக்கில்லையா என்பதே அவரை பித்துப் பிடிக்க வைத்திருந்தது. ஊரிலுள்ள தெய்வத்திற்கெல்லாம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தார், நிறைவேறாது எனத் தெரிந்தும். 

“என்னம்மா, எல்லாரும் இங்க இருக்காங்க?” என கௌரிக்கு உடல்நிலை சரியில்லையென, அம்மாவிற்கு துணைக்கு வந்த அமிர்தா, டாக்டரைப் பார்த்துவிட்டு லேபர் வார்டு வழியாக வந்தவர்கள் தயங்கி நின்றனர்‌. 

“அமராவுக்கு இடுப்பு வலி வந்துருச்சோ என்னவோ?” என கௌரி கூறினார்‌‌.

“வாங்கம்மா… பாத்துட்டுப் போலாம். ” என அமிர்தா ஆர்வமாக,

“அங்க அகிலாண்டம் அத்தை இருக்காங்க பாரு. நாம போனா ஏதாவது இட்டுக்கட்டி சொல்லுவாங்க. கொழந்த பொறக்கட்டும். வீட்டுக்குப் போயி பாக்கலாம்.” என பேசிக் கொண்டிருக்கு, 

வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தானே ஆகவேண்டும்.

“சாரி… எங்களால குழந்தையை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது.” எனும் வழக்கமான வசனத்தை கூறி மருத்துவர் அமராவதியின் வாழ்விற்கு என்ட் கார்டு போட்டார். 

அமிர்தாவின் காதில் விழுந்தது இந்தச் சொற்களே‌. அம்மாவும் மகளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். சுதாரித்துக்கொண்டு வேகமாக அங்கு செல்ல, யார் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும். கௌரிக்கு தம்பியைப் பார்ப்பதா, சித்தியைப் பார்ப்பதா எனப் புரியவில்லை. உடனே கணவருக்கும், பெரிய தம்பிக்கும் தகவல் கொடுக்க அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் முன்னும் பின்னுமாக வந்து விட்டனர். 

ருத்ரனை ஏறெடுத்துப் பார்க்கவே அமிர்தாவிற்குப் பயமாக இருந்தது. இறுகிப் போய் அமர்ந்திருந்தான். 

“கண்டவ கண்ணுப்பட்டுதான் எம்மக அல்பாயுசுல போயிட்டா.” என பெருங்குரலெடுத்து அகிலாண்டம் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, அதை சிந்தையில் வாங்கும் நிலையில் அமிர்தா இல்லை. 

அப்பொழுதுதான் குழந்தையை சுத்தம் செய்து துணியில் சுற்றி வெளியே கொண்டு வந்தனர்.

அனைவரும் அதிர்ச்சியில் ஆளுக்கொரு பக்கமாக அழுது கொண்டிருக்க, யாரிடம் குழந்தையைக் கொடுப்பது எனத் தெரியாமல் செவிலி தயங்கி நின்றார். 

“அப்பன் தான் வயித்துல இருக்கும் போதே, தகப்பன முழுங்கினான்னா, அவன்பிள்ள பொறந்தவுடனே ஆத்தாள முழுங்கிருச்சு.” என என்ன குழந்தையெனக் கூட அறியாத பச்சைமண் மீது அகிலாண்டம் வாய்கூசாமல் பழி போட விலுக்கென நிமிர்ந்தான் ருத்ரன்.

தன் தவறை மறைக்க பழியை குழந்தை மீது போட்டார் அகிலாண்டம். மனம் வெறுத்துப் போயிற்று ருத்ரனுக்கு. 

இவ்வார்த்தைகளைக் கேட்டதும் நெஞ்சம் தவதாயப்பட, தாவி குழந்தையை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள் அமிர்தவல்லி. ‘ச்சே… என்ன பொம்பள?’ என வெறுத்துப் போக,

குட்டியாக வட்டம் போட்டு… கண், காது, மூக்கு, வாய் என புள்ளி வைத்த சிறுபிள்ளை ஓவியமாய், கண்மூடி கையிலிருந்த அரும்பைப் பார்த்து கண்ணீர் வடித்தாள் அமிர்தா. அவளையும் அறியாமல் ஏதோ ஒரு ஏக்கம் பிறக்க அடிவயிறு குழைந்தது.

வாய்விட்டு அழும் பாக்கியம் கூட இல்லாதவனாய் அமர்ந்திருந்தான் ருத்ரன். மாமனைப் பார்க்க இன்னும் நெஞ்சம் விம்மியது அவளுக்கு.

எல்லாரும் துக்கம் கொண்டாட, மனோகரும், வெங்கடேசனும் தான் துக்கத்தை விழுங்கிவிட்டு மற்ற காரியங்களில் கவனமானார்கள். தகவல் அறிந்து கல்லூரி சென்றிருந்த தேன்மொழியும் வந்து விட்டாள்‌. 

என்னதான் அண்ணனை நன்றிக்கடனுக்குப் பணயமாக்கி திருமணம் செய்திருந்தாலும், அண்ணி என வந்தபிறகு அமராவதியிடம் தேன்மொழி முகத்தைத் திருப்பவில்லை. சிறுவயதிலிருந்து பழகியவள் தானே. அத்தை மகளும் கூட. நீரடிச்சு நீர் விலகமுடியாதே. 

அதுவும் அவள் குழந்தை உண்டான பிறகு மஞ்சுளாவும், தேன்மொழியும் அமராவை நன்கு கவனித்துக் கொண்டனர். அத்தை அழைத்துச் சென்ற பிறகும் கூட, கல்லூரி விட்டு வரும் வழியில் அமராவை பார்த்துவிட்டு தான் வருவாள். இதில் அவளுக்கும் அழகருக்கும் இடையில் இருந்த ஊடல் கூட சற்று நீர்த்துப் போயிற்று. 

முன்தினம் கூட வீட்டிற்குப் போய் பார்த்து பேசிவிட்டுதான் வந்தாள். ஆனால் இன்று அவள் உயிருடன் இல்லை என்பதே ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தது தேன்மொழிக்கு.

அதற்குள் அமிர்தாவின் கையிலிருந்த குழந்தை அழ ஆரம்பிக்க, அருகில் வந்தவள் என்ன குழந்தை எனக்கேட்க, அப்பொழுதுதான் அமிர்தாவும் என்ன குழந்தையெனப் பார்த்தவள்,

“பெண் குழந்தை தேனு. அப்படியே அமராவாட்டம். வலது கையில பாரேன். ஆறு விரல்.” என்றாள் கண்ணீரோடு தொண்டையடைக்க.

மார்போடு அணைத்துப் பிடித்திருக்க, கண்கூடத் திறக்காமல், செப்பு வாய் திறந்து பறவைக்குஞ்சாய் முகத்தை தூக்கி மார்க்காம்பு தேடிய கிள்ளையின் முகம் பார்த்தவள் அடுத்த நொடி நெஞ்சு வெடிக்க அழுதாள்.

குழந்தையும் வீரிட்டு அழ, இவர்களிடம் வந்த கௌரி, “குழந்தைக்கு பசியமத்தனுமே?” என கண்கலங்கினார். 

“ம்ம்மா… இப்ப என்னம்மா பண்றது?” என அவளும் சேர்ந்து அழ,

 “மெடிக்கல்ல பால் பவுடரும், பால் பாட்டிலும் வாங்கிட்டு வர்ற. கேன்டீன்ல சுடுதண்ணி வாங்கிக்கலாம்.” என மெடிக்கல் நோக்கி விரைந்தார். 

பால்பாட்டிலை சுடுதண்ணியில் போட்டு நன்கு கழுவிவிட்டு, பால் பவுடரை கலந்து கொடுக்க, பிறந்த பசியமர்ந்து, கண்ணயர்ந்தது குறுத்துவாழை. 

அதற்குள் மருத்துவமனை சம்பிரதாயங்களை மனோகரும், வெங்கடேசனும் முடித்திருக்க, அமராவதியை வீட்டிற்கு எடுத்து வரப்பெற்று ஈமக் காரியங்கள் நடந்தேறின. 

கணவனாய் எல்லா காரியங்களையும் செய்தவனுக்கு இவளை நன்றாக வாழவச்சுப் பாரக்கவில்லையோ என்ற குற்ற உணர்வு மனதில் நிரந்தரமாய் நிலைகொண்டது. இப்படி அல்பாயுசு எனத் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் அவளோடு இருந்திருக்கலாமோ. பேசிச் சிரித்திரிக்கலாமோ. எது பிடிக்கும் பிடிக்காது என வாங்கிக் கொடுத்திருக்கலாமோ. அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கலாமோ. கல்யாணத்திற்கு முன் அனைவரும் ஒன்றாக இதுபோல் இருந்தது தானே.’ என பலவித எண்ணங்கள் அவனைப் பாடாய்ப்படுத்தியது. 

 அடுத்துவந்த நாட்களிலும் குழந்தையை தேன்மொழியும், அமிர்தாவுமே கவனித்துக் கொண்டனர். இரவில் தேன்மொழியிடம் விட்டுச் செல்பவள் பகலில் எழுந்தவுடன் அம்மாவை அழைத்துக் கொண்டு இங்கு வந்தவிடுவாள். ஆனால் ஒருவார்த்தை கூட மாமனிடம் பேசவும் இல்லை. அவன் இருக்கும் பக்கம் பார்வை போகவுமில்லை.

அவனும் அவன் அறையைவிட்டு வெளியே வந்து யார் முகத்தையும் பார்க்க விரும்பவில்லை. அண்ணனின் நிலை பார்த்து தேன்மொழிக்கு பயம் வர, அமிர்தாவிடம் சொல்லி அழுதாள்‌.

“சரியா சாப்பிடறதே இல்ல அமிர்தா. இப்படியே இருந்தா அண்ணனுக்கும் ஏதாவது ஆயிருமோன்னு பயமாயிருக்கு.” என அழ, 

குழந்தையை எடுத்துக் கொண்டு முதன் முதலாக அவனது அறைக்குள் சென்றாள். வெறும் பனியன். கைலியில், தலைக்குக் கைகொடுத்து முதுகுகாட்டிப் படுத்திருந்தான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஆள்வந்த கவனம் கூட இல்லை. இப்பொழுது முழுவதுமாக அமராவதியே அவனை ஆக்கிரமித்திருந்தாள். உயிரோடு இருக்கும் பொழுதைவிட இறந்த பிறகுதான் இறந்தவர்கள் நினைவு அதிகமாக ஆட்கொள்ளும் எனும் பொதுவிதிக்கு இவனும் விலக்கல்ல. 

இவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் அவளை கவனிக்கத் தவறிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி தான் இவனை கொன்று கொண்டிருக்கிறது. 

சற்று நேரம் அமைதியாக நின்றவள், அவன் திரும்பிப்பார்க்கும் அறிகுறி இல்லாததால்,

‘மன்னுச்சுக்கோ பட்டும்மா. உனக்குப் பால் கொடுக்கையில கால்ல சுண்டுவேன்ல. அப்படி நெனச்சுக்கோ.’ என மனதில் குழந்தையோடு பேசினாள். 

பிறந்த குழந்தை கண்திறக்காமல் தூங்கிக்கொண்டே இருக்க,

“இவ எப்ப எந்திரிப்பா? எப்பம்மா பால் குடிப்பா?” என கௌரியை நச்சரிக்க, 

“முப்பது நாள்வரைக்கும் குழந்தைங்க அதிகமா தூங்கிக்கிட்டே தான் இருக்கும். நாம தான் சுண்டி விட்டு எழுப்பி பால் கொடுக்கணும்” என பாதத்தின் நடுவில் கௌரி சுண்டிவிட, வீலென்று கத்தியது. 

“ஐய்யோ… அம்மா!” என இவள் குழந்தைக்கு முன் பதற, 

“முப்பது நாள் பிள்ளைய குருடிகூட வளக்கலாம்னு சொல்லுவாங்க. தூங்கிக்கிட்டேதான் இருக்குங்க. அதுக்கு பின்னாடிதான் ரவ்வும் பகலும் ஆட்டம் காட்டும்” எனக் கூறிக்கொண்டே, மகள் கையில் பால் பாட்டிலை கொடுத்துச் சென்றார். 

மஞ்சுளாதேவி மகன் கவலையிலேயே உழண்டு விட்டார். எந்த சிந்தனையும் இல்லை. பதினாறாம் நாள் காரியம் வரைக்கும் கௌரியும், மனோகருமே கவனித்துக் கொண்டனர். வெங்கடேசனும் வந்து காரியத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க, சித்ரா துக்கத்திற்கு வந்து சென்றார். 

அவனது அறைக்குள் ஆள் வந்தது கூடத் தெரியாமல் படுத்திருந்தவனை எழுப்ப, பிள்ளையிடம் சமரசம் பேசிவிட்டு உள்ளங்காலில் சுண்டிவிட, குழந்தை வீரிட்டு அழுததில் பதறித் திரும்பினான். 

அவனது முகம் முழுதும் மீசையும் தாடியுமாக, கிட்டத்தட்ட பித்துப்பிடிக்காத குறையாக அவனைப் பார்க்க கண்ணில் இரத்தம் வடியாத குறை குமரிக்கு. இன்னும் குழந்தை வீரிட்டு அழ, 

“ஏன் அதைக் கத்தவிடுற. வெளியே கொண்டு போ.” என எரிந்து விழுந்தான். 

அவன் தன் சிந்தனையில் இல்லை என்பது நன்கு தெரிந்தது.

“பிள்ளை கத்துறதக் கேட்டாலாவது அப்பனுக்கு புள்ள நெனப்பு வருதான்னு பாக்கதான்.” என்றாள். பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“நீங்க பாக்கலைனா இந்தப் பிள்ளையப் பாக்க ஆளில்லாம இல்ல. உங்கள வளத்த மாதிரியே, ராணி மாதிரி வளப்பாங்க மஞ்சுளா அம்மாச்சி. ஆனா, ஏற்கனவே ஆத்தாள முழுங்கின புள்ளைனு, பேரு வாங்குன பிள்ளைக்கு, நீங்களும் இப்படி உள்ளேயே அடஞ்சு கிடந்தீங்கனா, அப்பனையும் பொழப்பக் கெடுத்து வீட்டோட இருக்க வச்சுருச்சுங்கற பேர வாங்கிக் கொடுத்துறாதீங்க. எத்தனபேரு பாசம் காட்டினாலும் பெத்தவங்க பாசம் மாதிரி வராது. உங்க புள்ளையும் அப்பா பாசம் கெடைக்காத பிள்ளையா வளரணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.” என்றவள் பிள்ளையை கட்டிலில் அவனருகில் போட்டுவிட்டு வெளியே வந்தாள். 

முகம் சிவக்க இன்னும் கத்தியழ, அந்தக் கதறல் அவனை என்னவோ செய்தது. வாரிக்கொள்ள மனம் துடித்தது. இத்தனை நாட்களாக குழந்தையை எப்படி மறந்தேன். இனி தன் வாழ்வின் ஆதாரமாக மகள் மட்டுமே போதும் என்ற எண்ணம் வர, தலை நிக்காத குழந்தையை எப்படித் தூக்குவது எனத் தெரியாமல், கைகூசியது. பால் பாட்டிலோடு உள்ளே வந்தவள், அவன் தடுமாறுவதைப் பார்த்துவிட்டு, குழந்தையைத் தூக்கி அப்பன் கையில் வைத்து, பாட்டிலையும் கொடுத்துவிட்டு சென்றாள். 

அவன் அறையை விட்டு வெளியே வர, அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த அகிலாண்டம், 

“என் மக வாசம்கூட இன்னும் வீட்டவிட்டுப் போகல. அதுக்குள்ள ரூம் வரைக்கும் போயாச்சு.” என சாடை பேச, 

குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தவன்,

“நீங்க வேற மாதிரி பேசியிருந்தாத்தான் ஆச்சர்யப் பட்டிருப்பே. உங்க வயசுக்கும், மரியாதைக்கும் தகுந்த மாதிரி பேசுங்க. உங்களுக்கு எப்படி இது அண்ணன் வீடோ. அதே மாதிரி இவளுக்கு…” என சற்று நிறுத்தியவன், அமிர்தாவைப் பார்த்துக் கொண்டே,

“அம்மாச்சி வீடு. அவ எங்க வேணா போவா, வருவா.” என அகிலாண்டத்திடம் அக்கா மகளை விட்டுக்கொடுக்காமல் பேச, 

“ம்மா… இனி அவங்க பாத்துக்குவாங்க. நாம கெளம்பலாம்.” என்றாள் கௌரியிடம். அதன் பின் அந்தவீட்டிற்குள் அவள் காலடி வைக்கவில்லை.  

பழைய நினைவுகள் மனதை இறுக்கிப் பிழிய, கண்களைத் துடைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள். அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தவள், இரவு முழுவதும் தூக்கமில்லாதது கண்ணில் மணலைக் கொட்டியது போல் உறுத்த, நீரை முகத்தில் அடித்துக் கழுவினாள். படுக்கையறையை விட்டு வெளியே வந்த மகளைப் பார்த்த கௌரிக்கு மகள் விடிய விடிய தூங்கவில்லை என, அவளது சிவந்து வீங்கிய கண் இமைகள் காட்டிக் கொடுத்தது. மகளுக்கு காஃபியை நீட்டியவள், இப்படியே விட்டால் சரிப்படாது, சித்தியிடம் பேச வேண்டுமென முடிவு செய்தார் கௌரி.

************

“பாண்டியா… எங்க இருக்க?” என கைபேசியில் பதட்டமாகக் கேட்டது அண்ணன் வெங்கடேசனின் குரல்.

“ஹோட்டல்ல தான்ணே இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க… இன்னைக்கி தானே ரிஜிஸ்ட்ரெஷன். பத்திரப்பதிவு ஆஃபிஸ் போலியா? நேத்தே உங்க அக்கவுன்ட்ல அஞ்சு லட்சம் போட்டுட்டேனே. பணம் கிரெடிட் ஆகலியா?” என இவனும் பதட்டமாகக் கேட்க,

“ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சுது பாண்டியா.” என்றவன் அடுத்து கூறிய செய்தியில் வேகமாக இருக்கையை விட்டு எழுந்தான். 

2 thoughts on “தெம்மாங்கு பூந்தமிழே 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top